'தொழில்நுட்ப ஜவுளித்துறை அதிவேக வளர்ச்சி பெறும்'
'தொழில்நுட்ப ஜவுளித்துறை அதிவேக வளர்ச்சி பெறும்'
UPDATED : பிப் 28, 2026 02:07 AM
ADDED : பிப் 28, 2026 02:02 AM

திருப்பூர்: ''இந்திய தொழில்நுட்ப ஜவுளித்துறை அதிவேக வளர்ச்சியுறும்'' என, இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்க (ஐ.டி.டி.ஏ.,) ஆலோசகர் அனுாப் ரக் ஷித் பேசினார்.
திருப்பூர், நிப்ட்-டீ கல்லுாரியில் நேற்று இரண்டாவது நாளாக நடந்த, 'பேஷ்கான் -2கே26' தேசிய கருத்தரங்கில் அனுாப் ரக் ஷித் பேசியதாவது:
செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட ஜவுளிகளை, தொழில்நுட்ப ஜவுளி என்கிறோம். 'அக்ரோ டெக்', 'பில்டுடெக்', 'மெடி டெக்' உட்பட, 13 துறைகளில், தொழில்நுட்ப ஜவுளி பயன்பாடும், உற்பத்தி வாய்ப்புகளும் உள்ளன.
கடந்தாண்டில், 25.46 லட்சம் கோடி ரூபாய் அளவு, சர்வதேச அளவில், தொழில்நுட்ப ஜவுளி வர்த்தகம் நடந்தது.
இந்தியாவில், 2.55 லட்சம் கோடி ரூபாயாக வர்த்தகம் உள்ளது. உலக சந்தை மதிப்பில், இது, 10 சதவீதம்; ஆண்டுதோறும், 10 சதவீதம் வளர்ச்சியுடன், இந்தியா முன்னேறி வருகிறது.
மத்திய அரசு, தொழில்நுட்ப ஜவுளி திட்டத்துக்கு, 1,480 கோடி ரூபாய்; பி.எல்.ஐ., - 2.0 திட்டத்துக்கு 10,683 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஏழு இடங்களில் பி.எம்., மித்ரா தொழிற்பூங்கா பணிகள் 4,445 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
கோர் ஸ்பின்னிங், தீ பரவலை தடுக்கும் துணி, 'ஏர்பேக்' துணி, கதிரியக்க தடுப்பு ஆடைகள், உயிரியல் சிதையும் பொருட்கள் போன்ற புதுமையான தயாரிப்புகளில் முதலீட்டு வாய்ப்பு அதிகம் உள்ளது.
பாரம்பரிய மற்றும் உயர் தொழில்நுட்ப முறைகளை ஒருங்கிணைத்த, உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் அதிகரிக்கும் முதலீடுகளால், இந்திய தொழில்நுட்ப ஜவுளித்துறை அடுத்த சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியை பெறும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோர் ஸ்பின்னிங், தீ பரவலை தடுக்கும் துணி, 'ஏர்பேக்' துணி, கதிரியக்க தடுப்பு ஆடைகள், உயிரியல் சிதையும் பொருட்கள் போன்ற புதுமையான தயாரிப்புகளில் முதலீட்டு வாய்ப்பு அதிகம் உள்ளது

