தைவானுடன் தொழில்நுட்ப பகிர்வு ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பு
தைவானுடன் தொழில்நுட்ப பகிர்வு ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:02 PM

திருப்பூர்:புதிய வர்த்தக வாய்ப்புகளைக் குவிக்க, பருத்தி ஆடைகள் மட்டுமல்லாது; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் திருப்பூர் தொழில்துறையினர் வலுவாக கால்பதிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி, பெரும்பாலும் பருத்தி நுாலிழை ஆடைகளை சார்ந்தே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்தால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, 10 முதல், 15 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளது.
திருப்பூரை பொறுத்தவரை, பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது. அடுத்தகட்ட வளர்ச்சி என்பது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறினால் மட்டுமே சாத்தியமாகும்.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி துணை குழு தலைவர் அருண் ராமசாமி கூறியதாவது:
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில், தைவான் முன்னோடியாக இருக்கிறது. அந்நாட்டுடன் தொழில்நுட்ப பகிர்வு ஏற்பட்டால், திருப்பூர் அதிகம் பயன்பெறும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 100 சதவீதம் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இந்திய தொழிற்கூட்டமைப்பு வாயிலாக, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு சென்றதில், தேவையான தொழில்நுட்ப பகிர்வு கிடைத்தது.
இனிவரும் ஆண்டுகளில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, தைவான் தொழில் அமைப்புகளுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.