ஜி.டி.பி., கணக்கீடு சரிதான்; பன்னாட்டு நிதியம் கருத்து: ஐ.எம்.எப்., பாராட்டு
ஜி.டி.பி., கணக்கீடு சரிதான்; பன்னாட்டு நிதியம் கருத்து: ஐ.எம்.எப்., பாராட்டு
ADDED : செப் 12, 2026 01:40 AM

புதுடில்லி: உலகளவில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு இடையிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக செயல்பட்டு வருவதாக பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜூலி கோஸாக் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2வது காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
இது ஐ.எம்.எப்., ஊழியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சந்தை கணிப்புகளைவிட அதிகமாகும். சேவைகள் துறை மற்றும் ஏற்றுமதியில் எதிர்பார்த்ததைவிட அதிக செயல்பாடு இருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
எரிசக்தி விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா அந்த சவால்களை சமாளித்து வருகிறது. உலக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்தியாவின் சமீபத்திய ஜி.டி.பி., புள்ளிவிபரங்களை ஐ.எம்.எப்., வரவேற்கிறது. புதிய தொழில்துறை உற்பத்தி குறியீடு மற்றும் புதிய உற்பத்தியாளர் விலை குறியீடு ஆகியவை ஜி.டி.பி., கணக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் மேலும் மேம்படும்.
இந்தியா தனது பொருளாதார புள்ளிவிபரங்களை நவீனப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை, புள்ளிவிபர கட்டமைப்பு மற்றும் தரத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
