ADDED : ஜூன் 27, 2026 11:23 PM

6,785
ஆம்பர் குழுமம் விரைவில் 18,900 கோடி ரூபாய் வருவாய் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கிறது. இதற்கிடையில், உ.பி.,யில் 6,785 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர், ஏசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலைகளை அமைக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,35,00,000
மேற்கு வங்கத்தில் சுமார் 90 லட்சம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உள்ளன. இவை, 1.35 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது என அம்மாநிலத்தின் சிறுதொழில் அமைச்சர் அசோக் திண்டா தெரிவித்துள்ளார்.
14%
நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், வெறும் 14 சதவீத நிறுவனங்களுக்கு மட்டுமே முறைசார்ந்த கடன் வசதி கிடைத்துள்ளது என்று டெலாய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 மார்ச் நிலவரப்படி, இத்துறையின் கடன் பற்றாக்குறை சுமார் 25 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
2,000
அடுத்த 20 ஆண்டுகளில், அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கும், இறக்குமதி எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், இந்தியா கூடுதலாக 2,000 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை உருவாக்க வேண்டும் என்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாகர் அதானி தெரிவித்துள்ளார்.
4,500
மேற்கு வங்கத்தில், அடுத்த சில ஆண்டுகளில் 4,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய எல் அண்டு டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் மென்பொருள் பூங்காவும், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் மூன்றாம் நிலை தரவு மையமும் அமைக்கப்படவுள்ளன.
84
இந்திய பெண் தொழில்முனைவோரில், 84 சதவீதம் பேர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதிகளை பயன்படுத்துவதாக டி.பி.எஸ். வங்கி இந்தியா - டிலாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 72 சதவீதம் பேர் யு.பி.ஐ., 38 சதவீதம் பேர் கடன் தளங்கள், 29 சதவீதம் பேர் பங்குத் தரகு தளங்களை பயன்படுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
