UPDATED : பிப் 05, 2026 09:43 AM
ADDED : பிப் 05, 2026 03:05 AM

மதுரை: ''தமிழகத்தில் நறுமண பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது,'' என, போடி நறுமண வாரிய துணை இயக்குநர் சிமந்தா சைக்கியா தெரிவித்தார்.
மத்திய வணிக அமைச்சகத்தின் ஸ்பைசஸ் போர்டு சார்பில், நறுமண பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வாங்குவோருக்கும் இடையேயான சந்திப்பு கூட்டம், முதன்முறையாக மதுரையில் நடத்தப்பட்டது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை, ஏற்றுமதியாளர்களிடம் காண்பித்து விளக்கம் அளித்தனர்.
துணை இயக்குநர் சிமந்தா சைக்கியா மேலும் கூறியதாவது: உலகிலேயே நறுமண பொருள்களை உற்பத்தி செய்வதிலும், அதை நுகர்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது. மிளகாய், சீரகம், நறுமண எண்ணெய், புதினா பொருள்கள், மஞ்சள், கறிவேப்பிலை பொடி, சிறு ஏலம், மிளகு, ஜாதிக்காய் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. கடந்த 2024 - 25ல் 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் டன் நறுமண பொருள்கள், அதுசார்ந்த மதிப்புக்கூட்டிய பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
மத்திய அரசின் நறுமண பொருள்கள் வாரியம் வாயிலாக, அவற்றின் மேம்பாடும் ஏற்றுமதியும் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழகத்தில், போடி, ஈரோடு, சென்னையில் நறுமண வாரியத்தின் மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. சென்னை, துாத்துக்குடியில் ஏற்றுமதி பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்யும் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகங்கை கொட்டகுடியில், நறுமண பூங்கா அமைக்கப்பட்டு, நறுமண பொருட்கள் மதிப்பு கூட்டுதல், இருப்பு வைத்தல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

