UPDATED : ஜூன் 19, 2025 12:52 PM
ADDED : ஜூன் 19, 2025 12:11 AM

புதுடில்லி:பொது காப்பீடு நிறுவனங்களின் நிதிநிலையை வலுப்படுத்தும் முயற்சியாக, மோட்டார் வாகன காப்பீட்டில், மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரீமியத்தை சராசரியாக 18 சதவீதம் வரை உயர்த்த ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அளித்த பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும்; அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாம் நபர் காப்பீடு, அனைத்து வாகனங்களுக்கும் சட்டப்படி அவசியமாகும். இதற்கான பிரீமியம் தொகை ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 முதல் மாற்றமின்றி தொடர்கிறது.
அதே நேரத்தில் மருத்துவ செலவுகள், சட்ட செலவுகள், வாகன சரிபார்ப்பு செலவுகள் அதிகரித்ததுடன், காப்பீடு கோருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் காப்பீடு நிறுவனங்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டு, வாகன காப்பீடு பிரிவில் நஷ்ட விகிதம் அதிகரித்து வருவதாக காப்பீடு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
![]() |