சென்னையில் 'பயோ சயின்ஸ் பார்க்' ஆய்வு பணிகளை துவக்கியது டிட்கோ
சென்னையில் 'பயோ சயின்ஸ் பார்க்' ஆய்வு பணிகளை துவக்கியது டிட்கோ
ADDED : பிப் 11, 2026 01:35 AM

சென்னை: சென்னை தரமணியில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 'பயோ சயின்ஸ் பார்க்' அமைப்பதற்கான ஆய்வு பணிகளை தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம் துவக்கியுள்ளது.
உயிரி அறிவியல் என்பது பரந்த அளவிலான நவீன ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த அறிவை வளர்க்கும் முக்கிய துறையாக திகழ்கிறது. உயிரினங்கள், அவற்றின் அமைப்பு, செயல்பாடு, வளர்ச்சி, பரிணாமம், சுற்றுச்சூழல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பு தான் உயிரி அறிவியல்.
மருத்துவம், மரபியல், விவசாயம் போன்ற துறைகளில், புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதுடன், உயிரியியல், உயிரி தொழில்நுட்பம், உயிரி வேதியியல் உட்பட பல துறைகளை உள்ளடக்கியது.
இந்த துறை, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளை ஊக்குவிக்க, சென்னை தரமணியில் ஏழு ஏக்கரில், டிட்கோ நிறுவனம், பயோ சயின்ஸ் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது.
'பயோ சயின்ஸ் பார்க்' ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஆய்வகங்கள், அதிநவீன ஆய்வு கருவிகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்
உயிரி தொழில்நுட்ப துறை நிறுவனங்கள், 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்புக்கு, குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்

