ADDED : ஏப் 23, 2025 05:59 AM

பிரியாணி பை கிலோ
இந்தியாவில் கே.எப்.சி., பீட்ஸா ஹட் போன்ற சர்வதேச துரித உணவு தொடரை நடத்தி வரும் 'தேவ்யானி இன்டர்நேஷனல்' நிறுவனம், 'ஸ்கை கேட்' ஹாஸ்பிட்டாலிட்டிக்கு சொந்தமான, 'பிரியாணி பை கிலோ' நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. பி.பி.கே., எனப்படும் இந்நிறுவனம், தற்போது 45 நகரங்களில், 100க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.
காதி விற்பனை உயர்வு
கடந்த 2024- - 25ம் நிதியாண்டில், காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய தயாரிப்புகளின் விற்பனை 1.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. 2013 - 14ல், 31,154 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்று இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில், காதி பொருட்களின் விற்பனை 447 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பதவிக்காலம் நீட்டிப்பு
ஆர்.பி.ஐ., துணை கவர்னர் ரபி சங்கரின் பதவிக்காலத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. கடந்த 2021ல் மே மாதம், 3 ஆண்டுகளுக்கு துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டார். 1990ல் ஆர்.பி.ஐ.,யில் பணிக்கு சேர்ந்த இவர், நிர்வாக இயக்குநர் உள்பட பல பொறுப்புகளை வகித்து உள்ளார்.
3,521 சதவீதம் வரி
தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம் மற்றும் மலேஷியா, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களுக்கு 3,521 சதவீதம் வரை, அமெரிக்கா வரி விதித்து உள்ளது. உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு இந்நாடுகள் இறக்குமதி செய்வதால், உள்நாட்டு தயாரிப்பாளர் பாதித்து வந்தனர்.
