
வணிகத்தை பிரிக்கும் திட்டமில்லை
ப யணியர் வாகன தயாரிப்பு மற்றும் டிராக்டர் வணிகத்தை தனியாக பிரிக்கும் திட்டமில்லை என, மும்பை பங்கு சந்தையில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணியர் வாகனம், டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்கள் தயாரிப்பை, தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க மஹிந்திரா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள அந்நிறுவனம், ஒரே நிறுவனத்திற்குள் வணிகத்தை வைத்திருப்பதன் வாயிலாக அதிக பலன்களை பெறுகிறோம் என தெரிவித்துள்ளது.
6,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
ஆ ந்திராவின் நெல்லுார் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 6,000 ஏக்கர் நிலத்தை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அம்மாநில அரசு ஒதுக்கி உள்ளது.
ஆண்டுக்கு, 9 முதல் 12 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக, நடப்பு நிதியாண்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 4,843 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
வால்வோ ஐச்சர் கியர்பாக்ஸ் ஆலை
ம த்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில், ஏ.எம்.டி., எனப்படும் ஆட்டோ கியர்பாக்ஸை உற்பத்தி செய்வதற்கான புதிய உற்பத்தி ஆலையை அமைக்க, வால்வோ ஐச்சர் நிறுவனம் 544 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த ஆலையில், வால்வோ குழுமத்தின் 12 - ஸ்பீடு, ஏ.எம்.டி., கியர்பாக்ஸ்கள் உற்பத்தி செய்யப்படும். ஓட்டுநரின் சோர்வை இந்த கியர் பாக்ஸ் குறைப்பது மட்டுமின்றி, வாகனத்தின் எரிவாயு செலவை குறைக்கும்.
ஐச்சர் நிறுவனத்தின் கனரக லாரிகள், வால்வோ நிறுவனத்தின் இந்திய மற்றும் ஆசிய சந்தைகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு 40,000 கியர்பாக்ஸ்கள் உற்பத்தியாக உள்ளன.