
4,000 ஊழியர்களை நீக்கிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள்
நடப்பாண்டில் இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 4,282 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக லேஆப்ஸ்.எப்.ஒய்.ஐ., தளம் தெரிவித்துள்ளது. மின்சார வாகனம் மற்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களே அதிக பணிநீக்கம் செய்துள்ளன. சர்வதேச அளவில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் பணிநீக்கங்களில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாகவும்; 84 சதவீதத்துடன் அமெரிக்கா முதலிடம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நடப்பாண்டு மட்டும் 76,907 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டாடா டிர்ஸ்ட்ஸ் அறங்காவலராக மீண்டும் வேணு சீனிவாசன்
டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலராக வேணு சீனிவாசன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். டி.வி.எஸ்., நிறுவன கவுரவ தலைவர் வேணு சீனிவாசன் அவரது ஆயுள் முழுக்க இந்த பொறுப்பில் தொடர டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மெஹ்லி மிஸ்திரியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. வரும் 28ம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இவர் ஆயுள் முழுக்க அறங்காவலராக தொடர அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் வழங்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
யுனிமெக் ஏரோஸ்பேஸ் பெங்களூருவில் 2 ஆலைகள்
பெங்களூரு ஏரோஸ்பேஸ் பூங்காவில் இரண்டு புதிய தயாரிப்பு ஆலைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக யுனிமெக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஆலைகளின் மொத்த பரப்பளவு 63,000 சதுர அடி என்றும்; இதோடு சேர்த்து நிறுவனத்தின் தயாரிப்பு பரப்பளவு 2.43 லட்சம் சதுர அடியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரோஸ்பேஸ் துறையில் பயன்படுத்தப்படும் அதி நவீன உதிரி பாகங்களை யுனிமெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதையடுத்து, நேற்றைய வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 4.61 சதவீதம் உயர்ந்து 984 ரூபாயாக இருந்தது.