ADDED : மார் 23, 2025 07:51 PM

இந்திய குடும்பங்களில் பெரும்பாலானோர், ஆன்லைனில் வங்கி கணக்கை அணுகும் போது சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லோகல் சர்கிள் நிறுவனம், நாடு தழுவிய அளவில் 334 மாவட்டங்களில் 50,000 பேருக்கு மேல், வங்கி சேவை அணுகல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற குடும்பங்களில், 64 சதவீதம் பேர் ஒரு வங்கி கணக்கை அணுக முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 23 சதவீதம் பேர், கே.ஒய்.சி., செயல்முறையால் வங்கி கணக்கை அணுக முடியவில்லை என கூறியுள்ளனர். லாகின் பிரச்னை காரணம் என 22 சதவீதம் பேர், வங்கி கணக்கு செயல்படாத நிலை என 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வங்கி கணக்கை அணுகுவதில் நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான செயல்முறை இல்லாததும் சிக்கலை ஏற்படுத்துவதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வங்கி கணக்கை அணுக முடியாதது குறித்து வங்கிகளை தொடர்பு கொள்ளும் போது, சரியான பதில் பெற முடியாமல் அல்லாட வேண்டியிருப்பதாகவும் பலரும் தெரிவித்து உள்ளனர்.