'பொதுத்துறை வங்கி ஒன்றுடன் ஐ.டி.பி.ஐ., வங்கியை இணையுங்கள்' நிதியமைச்சருக்கு சங்கத்தினர் கோரிக்கை
'பொதுத்துறை வங்கி ஒன்றுடன் ஐ.டி.பி.ஐ., வங்கியை இணையுங்கள்' நிதியமைச்சருக்கு சங்கத்தினர் கோரிக்கை
ADDED : அக் 29, 2025 03:10 AM

புதுடில்லி: ஐ.டி.பி.ஐ., வங்கியை ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அகில இந்திய ஐ.டி.பி.ஐ., அலுவலர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
ஐ.டி.பி.ஐ., வங்கியில் மத்திய அரசுக்கு 45 சதவீதமும், எல்.ஐ.சி.,க்கு 49 சதவீதமும் பங்கு உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் வங்கியின் 60 சதவீத பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவில் அரசு தீர்மானமாக இருப்பதாகவும், திட்டமிட்டபடி பங்கு விற்பனை நடைபெறும் என்றும் நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியாரிடமோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடமோ விற்கும் மத்திய அரசின் திட்டம், வங்கியில் டிபாசிட் செய்துள்ளவர்கள், கடன் வாங்கியுள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மற்றும் 20,000க்கும் அதிகமான பணியாளர்களின் நலனுக்கு எதிராக அமையும்.
எனவே, நாட்டு நலனை கருத்தில் கொண்டு ஐ.டி.பி.ஐ., வங்கியை ஏதேனும் ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

