ADDED : ஏப் 23, 2025 05:55 AM

போபால்: ஊடகம், தொலைக்காட்சி சேனல்கள், ஓ.டி.டி., தளங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு நடக்கவிருக்கும் 'வேவ்ஸ்' எனப்படும், உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு, ஒரு மிகப்பெரும் வாய்ப்பாக இருக்கும் என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் அடுத்த மாதம் 1 முதல் 4ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 'வேவ்ஸ் பஜார்' எனும் நிகழ்ச்சியும், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் வட்ட மேசை விவாதமும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
'ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைய உள்ள இந்த வேவ்ஸ் மாநாடு, கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்தியாவிலும், உலகளவிலும் முன்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.
வேவ்ஸ் மாநாடு வாயிலாக, இந்திய தொழில்நுட்பம் மற்றும் கன்டென்ட் உருவாக்கம் குறித்து, உலக நாடுகளுக்கு ஒரு பார்வை கிடைக்கும்' என அமைச்சர் தெரிவித்தார்.
