'அரசு திட்டங்களை பயன்படுத்தி தொழிலை மேம்படுத்த வேண்டும்'
'அரசு திட்டங்களை பயன்படுத்தி தொழிலை மேம்படுத்த வேண்டும்'
ADDED : நவ 23, 2024 11:05 PM

சென்னை:''சிறு, குறு தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த, அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதை பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும்,'' என, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறினார்.
இந்தியாவில் சிறு, குறு தொழில்களுக்கான, 'லகு உத்யோக் பாரதி' அமைப்பு சார்பில், தொழில்முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கம், நேற்று, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்றது.
கருத்தரங்கை துவக்கி வைத்து அவர், பேசியதாவது:
இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் ஈடுபடுவோர் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள், அரசின் திட்டங்களை எப்படி எளிதில் பெறுவது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. தொழில்நுட்ப கல்விக்கு அரசு முக்கியத்துவம் வழங்குவதால், அதன் வாயிலாக உற்பத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
தற்போது, ஏற்றுமதியில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது. புதிய தொழில்நுட்பத்துடன், சிறு, குறு தொழில்கள் அடுத்தக்கட்டத்தை அடையும் போது, சீனாவை போல் ஏற்றுமதியை மேம்படுத்த முடியும்.
எல்லா பொருட்களும் இந்தியாவில் கிடைக்கும் வகையில் தொழிலை மேம்படுத்த முடியும். இதற்கு, அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதை முறையாக பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.