ADDED : பிப் 07, 2026 01:49 AM

திருப்பூர்: கடந்த நான்கு மாதங்களில் பஞ்சு வரத்து, எட்டு சதவீதம் குறைந்துள்ளதால், இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டுமென, ஜவுளித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டின் செப்டம்பர் வரை பருத்தி ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
கடந்த, 2023 -24, 2024 -25ம் பருத்தி ஆண்டுகளில், பஞ்சு மகசூல் தொடர்ந்து குறைந்தது; உள்நாட்டு தேவை அதிகரித்து மகசூல் குறையும்போது, இறக்குமதியின் வாயிலாக கூடுதல் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
நடப்பு பருத்தி ஆண்டில் பஞ்சு வரத்து மேலும் குறையும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இதேநிலை தொடர்ந்தால், ஆண்டு இறுதியில் பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், 11 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என, ஜவுளித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், “விலை கூடுதலாககிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், தினசரி பஞ்சு வரத்து குறைந்துவிட்டது.
இதேநிலை தொடர்ந்தால், ஆண்டு இறுதியில் பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஜவுளித்துறையினர் நலன்கருதி, பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

