சுங்க வரி குறித்து முடிவெடுக்காமல் முடிந்தது உலக வர்த்தக அமைப்பு கூட்டம்
சுங்க வரி குறித்து முடிவெடுக்காமல் முடிந்தது உலக வர்த்தக அமைப்பு கூட்டம்
ADDED : மார் 31, 2026 02:52 AM

புதுடில்லி: கேமரூன் நாட்டில், உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில், இ - காமர்ஸ் சுங்க வரிவிலக்கு நீட்டிப்பு குறித்து, ஒருமித்த கருத்து ஏற்படாமலேயே கூட்டம் முடிவடைந்துள்ளது.
இதுகுறித்து டபிள்யு.டி.ஓ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: நேரம் போதாததால் நிலுவையில் உள்ள சில பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க முடியவில்லை.
அதாவது, உலக வர்த்தக அமைப்பின் இ - காமர்ஸ் பணி திட்டம், மின்னணு பரிமாற்றங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க வரி விலக்கு நீட்டிப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள புகார்கள் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் போய்விட்டது.
இ - காமர்ஸ் இறக்குமதி வரி தடை பிரேசிலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முடங்கியுள்ளன. சில நாடுகள் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்கா 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மின்னணு பரிமாற்றங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு 1998 முதல் இருந்து வரும் வரிவிலக்கை நீட்டிப்பதற்கு டபிள்யு.டி.ஓ., உறுப்பினர்கள் உடன்படுகின்றனர். டிஜிட்டல் நிறுவனங்களின் வருமானம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், இ- - காமர்ஸ் சுங்க வரி விலக்கு காரணமாக, இறக்குமதியை கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் சுங்க வருவாயை பெறுவதிலும் அந்தந்த நாட்டு அரசுகளுக்கு வரம்புகள் உள்ளன.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த வரி நீட்டிப்புக்கு எதிராக உள்ளன. காரணம், திரைப்படங்கள், இசை, வீடியோ கேம்கள் போன்ற மின்னணு பரிமாற்றங்களின் இறக்குமதி அதிகரித்து வருவதுதான். இவற்றில் சில, இந்த வரி விலக்கு விதிகளின் கீழ் வரக்கூடியவை. இவ்வாறு தெரிவித்து உள்ளன.
