/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (5)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (5)
ADDED : செப் 16, 2024 01:29 PM

ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும்
தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
கைத்தறிப் பட்டு; வாங்காத பணத்துக்கு அபராதம் கட்டு!
நா ன் காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். இது கைத்தறி என்பதால், ஜி.எஸ்.டி., அமல் செய்யப்படுவதற்கு முன்பு, எங்களுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது 5 சதவீத ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது.
நாங்கள் நெய்து, கடைகளுக்குக் கொடுக்கும் புடவைகளுக்கு, கடைக்காரர்கள் எங்களுக்குப் பணம் கொடுக்க மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை கூட ஆகிறது.
ஆனால், நாங்கள் மாதம் தவறாமல் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியுள்ளது. பணம் இல்லாமல் செலுத்த முடியாதநிலையில், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபாய் அபராதம் மற்றும் வட்டியும் சேர்த்து விதிக்கப்படுகிறது. கடையில் இருந்து நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்பவர்கள், பில் போட்டதும் முழுத் தொகையுடன், ஜி.எஸ்.டி.,யை சேர்த்து வசூலித்து விடுகின்றனர்.
ஆனால், ஒரு மாதம் கழித்துத்தான் ஜி.எஸ்.டி., செலுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்த வட்டியையும், அபராதத்தையும் விதிப்பதுதானே நியாயம். ஆறு மாதம் கழித்தோ, ஓராண்டு கழித்தோ பணம் பெறும் எங்களுக்கு விதிப்பது நியாயமே இல்லை. மொத்த வியாபாரம் செய்பவர்கள், ஒவ்வொரு பில்லுக்கும் பணம் வாங்கும்போது, அந்தந்த பில்லுக்கான ஜி.எஸ்.டி.,யை செலுத்தும் வசதியைச் செய்து தர வேண்டும்.
அல்லது எங்களிடம் கொள்முதல் செய்பவர்கள் உள்ளீட்டு வரி (ஐ.டி.சி.,) எடுத்துக் கொள்வதால், அவர்களே பில் தொகையில் ஜி.எஸ்.டி.,யை மாதா மாதம் செலுத்த வகை செய்ய வேண்டும். நாங்கள் வாங்காத பணத்துக்கு ஜி.எஸ்.டி.,யையும், அபராதத்தையும் மிகவும் சிரமப்பட்டு செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி., கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெயர் குறிப்பிட விரும்பாத வரியாளர்.
'தினமலர்' நாளிதழுக்கு நன்றி
நாட்டில் எத்தனையோ பத்திரிகைகள் இருந்தாலும், வணிக பெருமக்களின் தீராத வலியை உணர்ந்து, ஒரு தாய் எப்படி தம் பிள்ளைகளை வளர்த்து காப்பாற்றுவாளோ, அதைப் போல்'தினமலர்' செயல்படுகிறது.
நாட்டின் முதுகெலும்பாக உள்ள வணிக பெருமக்களின் அபய குரலை யாரும் செவி கொடுத்து கேட்காத போது, உண்மையிலே உள்ளன்போடு வணிக பெருமக்கள், ஜி.எஸ்.டி.,யால் படும் பெரும் அவதிகளையும், அதிகார வர்க்கத்தின் தொடர் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் குரலையும், எழுதி அனுப்புங்கள் நாங்கள் அதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு செல்லும் வகையில், தினமலரில் வெளியிடுகிறோம் என்ற செய்தியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். 'தினமலர்' வணிக பெருமக்களுக்கு செய்யும் அளப்பரிய சேவைக்கு, தமிழ்நாடு அனைத்து வணிக பெருமக்களின் சார்பில் நெஞ்சம் நிறைந்த
நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க தினமலரின் வணிக ஆதரவு.
- எம். தங்கராஜ் , மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பருப்பு தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, சேலம்.
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என
எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in