UPDATED : ஆக 09, 2026 02:51 AM
ADDED : ஆக 09, 2026 02:35 AM

முதலீட்டாளர்களின் பல்வேறு முதலீட்டு விருப்பங் களான பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், ஏ.ஐ.எப்., - பி.எம்.எஸ்., தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய பலதரப்பட்ட முதலீடுகளுக்கு இடையே, எஸ்.ஐ.எப்., திட்டங்களில் எவ்வளவு நிதியை முதலீடு செய்வது என்பதை முடிவு செய்வது அவசியம்.
உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டு நிதியில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை மட்டுமே எஸ்.ஐ.எப்., திட்டங்களில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த 10 சதவீத ஒதுக்கீடானது, எஸ்.ஐ.எப்., கட்டமைப்பின் நன்மைகளை பெற போதுமானது.
ஒருவேளை, இத்திட்டம் எதிர்பார்த்த அளவு செயல்படாமல் போனால், அது உங்கள் ஒட்டுமொத்த செல்வத்தையும் பாதிக்காதவாறு பாதுகாக்கும். அதற்காக இந்த அளவுடன் மட்டுமே நிறுத்திக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்துவிட வேண்டாம். 10 சதவீதத்துடன் தொடங்கி, திட்டத்தின் செயல்பாட்டை கவனித்து பின்னர் முதலீட்டை மாற்றி அமைக்கலாம்.
எஸ்.ஐ.எப்., முதலீடுகள் குறித்த தீவிரமான விளம்பரங்கள் அல்லது தொடக்க கால ஆர்வத்தின் காரணமாக, வரம்பிற்கு மீறி இதில் முதலீடு செய்வது தவறான அணுகுமுறையாகும். எஸ்.ஐ.எப்., என்பது உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டிற்கு பலம் சேர்க்கும் ஒரு பகுதி என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
நடைமுறை விதிகள் புதிய திட்டங்கள் அறிமுகமாகும் போதெல்லாம் அவற்றை நோக்கிச் செல்ல கூடாது. பண்டு மேனேஜரின் முந்தைய செயல்பாட்டு சாதனை, தெளிவான உத்தி, வெளிப்படையான கட்டண கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளரின் ஒட்டுமொத்த முதலீட்டோடு பொருந்தும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு இசைக்குழு சிறப்பாக இயங்க பல்வேறு இசைக்கருவிகள் தேவைப்படுவதை போல, ஒரு சிறப்பான முதலீட்டு போர்ட்போலியோ உருவாக்க பலவகை முதலீட்டு முறைகள் தேவைப்படுகின்றன. அந்த வரிசையில், எஸ்.ஐ.எப்., என்பது ஒட்டுமொத்த போர்ட்போலியோவும் அல்ல; அது போர்ட்போலியோவை மேலும் வலுவாக்கும் ஒரு பகுதி என்பதை மட்டும் புரிந்துகொண்டு முதலீட்டை தொடங்குங்கள்.
![]() |
முதலீடு செய்யும் முன், உங்கள் சொந்த அபாய திறன், முதலீட்டு கால அளவு மற்றும் நிதி இலக்குகளை கருத்தில் கொண்டு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
(முற்றும்)

