ADDED : மே 06, 2026 02:56 AM

நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக, நிதி திரட்ட வெளியிடப்படும் நகராட்சி பத்திரங்களின் மதிப்பு, 2030ம் ஆண்டுக்குள் 75,000 கோடி ரூபாயாக உயரும் என்று 'ஐ.எம்.சி., வர்த்தக மற்றும் தொழில்துறை சபை' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது நகராட்சி பத்திரங்களின் மதிப்பு 2,100 கோடி ரூபாயாக உள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு பணிகளுக்காக வரும் 2036ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 82 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும். இந்த தேவையை பூர்த்தி செய்ய, எதிர்காலத்தில் நகராட்சி பத்திரங்களின் வெளியீடு அதிகரிக்கக்கூடும்.
சிறு முதலீட்டாளர்களும் நகராட்சி பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. தற்போது நகராட்சி பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 80,000 ஆக உள்ள நிலையில், இது 2030ம் ஆண்டுக்குள் ஒரு கோடியாக உயரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
