ADDED : பிப் 12, 2026 01:52 AM

ஓ .டி.பி., மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், 'ஏர்டெல்' நிறுவனம், ஏ.ஐ., அடிப்படையிலான பாதுகாப்பு வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவருக்கு மோசடி அழைப்புகள் வரும்போது, எச்சரிக்கை செய்தி மொபைல் திரையில் காட்டப்படுவது போல, ஓ.டி.பி., கேட்டு வரும் போலி செய்திகள் குறித்து எச்சரிக்கும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
''மோசடி நபர் உங்களிடம் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, வங்கி அனுப்புவது போல அவர் அனுப்பும் ஓ.டி.பி., வந்தால், அதனை ஏ.ஐ., கண்டறிந்து 'ஓ.டி.பி., பகிர்வதில் ஆபத்து' என்கிற எச்சரிக்கையை வழங்கும். இதன் வாயிலாக, ஓ.டி.பி., பகிர்வதை தவிர்க்க முடியும். இந்த வசதி தற்போது ஹரியானாவில் செயல்பாட்டில் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், நாடு முழுதும் அறிமுகப்படுத்தப்படும்” என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

