UPDATED : பிப் 15, 2026 01:43 AM
ADDED : பிப் 15, 2026 01:40 AM

வண்ணங்களை வாரியிறைக்கும் பெயின்ட் துறைக்கு தொடர்ந்து அழுத்தம் இருக்கும் என்கிற அதிர்ச்சி அறிக்கையை 'மோர்கன் ஸ்டேன்லி' தரகு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 'ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், கான்சாய் நெரோலாக்' ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் முறையே 11 சதவீதம், 17.60 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் வரை குறையக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெயின்ட் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும், இத்துறை சார்ந்த பங்குகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து செபி அனுமதி பெற்ற பங்குச்சந்தை ஆய்வாளர் எஸ். வளர்முருகன் கூறியதாவது:
“இந்திய பெயின்ட் துறைக்கு இது முக்கிய காலகட்டம். நடப்பாண்டை பொறுத்தவரை, இந்த துறை ஒருபுறம் வளர்ச்சியையும் மறுபுறம் கடுமையான போட்டியையும் சந்தித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவிலான லாபம் இல்லாவிட்டாலும், துறை சீரான வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால், 'பிர்லா ஓபஸ், ஜே.எஸ்.டபிள்யு.,' போன்ற பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய முதலீட்டுடன், புதிதாக துறைக்குள் நுழைந்துள்ளன. இது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு போட்டியை அதிகரித்துள்ளது.
நீண்ட காலமாக 'ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ்' போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருந்தாலும், புதிய நிறுவனங்களின் வருகையால், விலைப்போர் ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவர, புதிய நிறுவனங்கள் விலையை குறைக்கின்றன. இதனால் பழைய நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இது நிறுவனத்தின் லாப வரம்பை பாதிக்கலாம்.
புதிய போட்டியாளர்கள் வந்தாலும், முன்னணியில் இருக்கும் 'ஏசியன் பெயின்ட்ஸ்' மீது அவற்றின் தாக்கம் குறைவாக இருக்கும்.
அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் 'பெர்ஜர் பெயின்ட்ஸ், கான்சாய் நெரோலாக்' போன்ற நிறுவனங்களே அதிக அழுத்தத்தை சந்திக்கும்.
கடந்த ஆறு மாதங்களில் 'ஏசியன் பெயின்ட்ஸ்' பங்கு விலை சரிந்திருந்தாலும், நீண்டகாலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயின்ட் என்பது மீண்டும் -மீண்டும் பயன்படுத்தும் பொருள். எனவே, இதற்கான தேவை தொடர்ந்து இருக்கும்.
துறை சார்ந்த போட்டிகளால் குறுகிய காலத்தில் லாபம் குறையலாம்; பங்குகள் மந்தமாக இருக்கலாம். ஆனால், வலுவான பிராண்டு, நல்ல விநியோகம் மற்றும் தொழிலில் புதுமை கொண்ட நிறுவனங்கள், நீண்டகாலத்தில் சிறப்பாக செயல்படும்.
சரியான நிறுவனங்களை தேர்வு செய்து, பொறுமையுடன் முதலீடு செய்தால்,பெயின்ட் பங்குகள் நீண்டகாலத்தில் நல்ல லாபம் தரும்.
தினசரி வர்த்தகர்கள் பெயின்ட் பங்குகளை எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.
இவ்வாறு கூறினார்.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு தொடர்ந்து நிதி ஒதுக்குவது, பெயின்ட் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாகும்
புதிய வீடுகளின் தேவை உயர்வதால் பெயின்ட் விற்பனை அதிகரிப்பு
மீண்டும் பெயின்ட் அடிக்கும் இடைவெளி 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைந்திருக்கிறது
அரசின் 'அனைவருக்கும் வீடு' திட்டங்கள் துறைக்கு வலுசேர்க்கின்றன.






