ADDED : ஏப் 16, 2026 12:17 AM

கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்திய கடன் பத்திர சந்தை நேற்று வலுவான ஏற்றத்துடன் காணப்பட்டது.
இந்திய பொருளாதாரம், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அதன் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது, நாட்டின் பொருளாதார சூழலுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அதேபோல, ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவற்றின் எதிரொலியாக, 10 ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 6.87 சதவீதமாக குறைந்துள்ளது.
சந்தையில் வட்டி விகிதம் குறையும்போது, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதிக வட்டி வழங்கும் பழைய பத்திரங்களுக்கு தேவை அதிகரிக்கும்.
இதனால், ஏற்கனவே கடன் பத்திரங்கள் அல்லது அதுசார்ந்த பண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இந்த விலை உயர்வு நல்ல லாபத்தை ஈட்டி தரும்.
அதேவேளையில், முதலீட்டாளர்கள் நாட்டின் பணவீக்கம் மற்றும் அரசின் 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திர ஏலம் ஆகியவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
மேலும், அதிகரித்து வரும் கார்ப்பரேட் பத்திர வெளியீடுகள் மற்றும் மேம்பட்டு வரும் பணப்புழக்க சூழல் ஆகியவை, சந்தையில் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
