போரக்ஸ் : அமெரிக்காவின் வட்டி முடிவால் ரூபாய்க்கு கிடைத்த புதிய பலம்
போரக்ஸ் : அமெரிக்காவின் வட்டி முடிவால் ரூபாய்க்கு கிடைத்த புதிய பலம்
UPDATED : செப் 18, 2025 11:57 PM
ADDED : செப் 18, 2025 11:56 PM

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 4.00--4.25 சதவீத வரம்பிற்குள் கொண்டு வந்தது. இந்த முடிவு, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தருவதோடு, உலகச் சந்தைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த வட்டி குறைப்பின் விளைவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாய்க்குப் புதிய பலம் கிடைத்துள்ளது. மேலும், நடப்பாண்டுக்குள் மேலும் இரண்டு முறை, மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள், வட்டி குறைக்கப்படும் என்றும்; அடுத்த ஆண்டிலும் ஒருமுறை குறைக்கப்படும் என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது டாலரின் பலவீனத்தைத் தொடர வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய்க்கு சாதகமான அம்சங்கள்
:
* பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி குறைத்ததால், டாலர் பலவீனமடைந்து, ரூபாய் வலுப்பெற வாய்ப்புள்ளது.
*இந்தியா - இ.எப்.டி.ஏ., வர்த்தக ஒப்பந்தம், இந்த அக்டோபரில் நடைமுறைக்கு வந்தால், அதிகளவிலான முதலீட்டை இந்தியா ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்து, ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும், எண்ணெய் விலை குறைந்ததால், இறக்குமதி செலவு குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., மற்றும் வரி நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கம் தருகின்றன.
இத்தகைய சாதகமான காரணங்களால், ரூபாய் வலுவடைந்து, ஸ்திரத்தன்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 87.70-க்கு கீழே சென்றால், 87.50 வரையும், தொடர்ந்து 87.20 வரையும் வலுப்பெற வாய்ப்புள்ளது. அதே சமயம், 88.20 அளவில் ரூபாயின் மதிப்பு குறையாமல் தடுக்கும் ஒரு வலுவான எதிர்ப்புச் சக்தி இருப்பதாகத் தெரிகிறது.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர், சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்