ADDED : மே 31, 2026 01:12 AM

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 'ஈக்விட்டி எப் அண்டு ஓ' பிரிவுக்கான வர்த்தக நேரம் 10 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டு, மாலை 3:40 மணி வரை நடைபெறும் என்று தேசிய பங்கு சந்தை தெரிவித்துள்ளது. தற் போதைய நடைமுறையில், 3:30 மணிக்கு வர்த்தகம் முடிகிறது.
பங்கு வர்த்தக பிரிவில் அறிமுகமாகும் 'நிறைவு ஏல அமர்வு' நடைமுறையுடன் ஈக்விட்டி எப் அண்டு ஓ பிரிவையும் ஒருங்கிணைப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிறைவு ஏல அமர்வு என்பது சந்தை முடியும் நேரத்தில் நியாயமான விலையை தீர்மானிக்க, முதலீட்டாளர்கள் வாங்கும், விற்கும் ஆர்டர்களை சமர்ப்பிக்க வழங்கப்படும் குறுகிய நேர வர்த்தக அமர்வு ஆகும்.
நிறைவு விலையை நிர்ணயிப்பதற்கான கணக்கீடு, இனி மாலை 3:10 முதல் 3:40 மணி வரையிலான வர்த்தகத்தின் அடிப்படையில் அமையும் என்றும் இதர வர்த்தக நேரங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
