UPDATED : டிச 10, 2025 01:28 AM
ADDED : டிச 10, 2025 01:06 AM

ரூபாய் மதிப்பு, கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று சிறிய ஏற்றம் கண்டது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவுகள் வெளிவர இருப்பதால், சந்தைகள் இன்னமும் கவனத்துடன் காத்திருக்கும் நிலையிலேயே உள்ளன.
இந்த மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள், 100 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்பில் பங்குகளை விற்றுள்ளனர். இது, ரூபாய் மீதான அழுத்தத்தை தொடர்ந்து வைத்திருக்கிறது.
பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிட்டதட்ட உறுதியான நிலையில், அவ்வங்கியின் தலைவர் பவல், அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து என்ன அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலக சந்தையில் உள்ளது.
![]() |
பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் போது, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய மத்திய வங்கிகள், வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருந்தாலோ அல்லது உயர்த்தினாலோ, டாலரின் மதிப்பு குறையலாம்.
இது இந்தியா உட்பட வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு சாதகமாக அமையும்.
டாலர் மதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பும், ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை தீவிரமாக கையாள்வதும் ரூபாய்க்கு சாதகமாக உள்ளது.
இன்று முதல் தொடங்கவுள்ள இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சு வெற்றிகரமாக அமைந்தால், அது ரூபாய்க்கு மேலும் பலம் சேர்க்கும்.
ரூபாய் மதிப்பு வரும் நாட்களில் 89.20-90.30 என்ற வரம்புக்குள் நிலைபெற வாய்ப்பு உள்ளது.


