ADDED : டிச 03, 2025 12:31 AM

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 89.94 என்ற இதுவரை இல்லாத சரிவை தொட்டது. வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 89.87ஆக இருந்தது.
நம் நாடு, உலகளாவிய வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்திலேயே உள்ளது. சந்தையில் டாலருக்கான தேவை அதிகமாக இருப்பது, ரூபாயின் மீட்சியை தடுக்கிறது.
இந்தியா - -- அமெரிக்காவுக்கான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையும், ரூபாய் மதிப்பு சரிய காரணமாக அமைந்துள்ளன.
அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், நவம்பர் மாதத்தில், இந்திய கடன் சந்தையில் 62.30 கோடி டாலரை முதலீடு செய்துள்ளனர். இது, ரூபாய் மதிப்பு மேலும் சரிவதை தடுக்க ஒரு முக்கிய ஆதரவாக இருக்கிறது.
பொதுவாக டாலர் பலவீனமடைந்தால், ரூபாய் வலுப்பெற வேண்டும். ஆனால், உள்நாட்டில் டாலருக்கான தேவை அதிகமாக இருப்பதால், ரூபாய் இன்னமும் சரிவிலேயே வ ர்த்தகமாகிறது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறுகிய காலத்தில், 89.20- 90.20 என்ற வரம்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 89.00 என்ற வரம்புக்கு கீழ் உறுதியாக சென்றால் மட்டுமே, ரூபாய் மதிப்பு நிலைத்தன்மையுடன் வலுப்பெறுவதற்கான முதல் அறிகுறியாக இருக்கும். 90.00 என்பது வலிமையான தடுப்பு நிலையாக இருக்கக்கூடும்.

