மீண்டும் உயர்வில் தங்கம், வெள்ளி மூன்று நாள் சரிவுக்கு ஒய்வு
மீண்டும் உயர்வில் தங்கம், வெள்ளி மூன்று நாள் சரிவுக்கு ஒய்வு
ADDED : பிப் 04, 2026 02:01 AM

கடந்த மூன்று நாட்களாக எம்.சி.எக்ஸ்., எனும் மல்டி கமாடிட்டி சந்தையில், தொடர் சரிவை சந்தித்த தங்கம், வெள்ளி விலை, நேற்று மீண்டும் உயர்வு பாதைக்கு திரும்பியது. கிட்டத்தட்ட 44 சதவீதம் தங்கம், விலை சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டியதால், நேற்று கிட்டத்தட்ட 13 சதவீதம் உயர்வு கண்டது.
நேற்று காலை வர்த்தகம் ஆரம்பித்த போது, 10 கிராம் தங்கத்தின் விலை 1.48 லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்வுடன் துவங்கியது. தொடர்ந்து, வர்த்தக நேரத்தின் போது, விலை மேலும் அதிகரித்து, 1.49 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. நேற்று மட்டும் 5,494 ரூபாய் அதிகரித்து, கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்வு கண்டது.
இதே போன்று, வெள்ளி விலையும் நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, ஒரு கிலோவுக்கு 2.45 லட்சம் ரூபாய் என்றளவில் துவங்கியது. வர்த்தக நேர முடிவில், கிலோவுக்கு 16,939 ரூபாய் உயர்ந்து, 2.53 லட்சம் ரூபாய் அளவில் இருந்தது. இது, கிட்டத்தட்ட 7.17 சதவீதம் உயர்வாகும்.
சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டின் தொடர்ச்சியாக, ஜனவரி வரை தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தன. குறிப்பாக, வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
ஆனால் கடந்த வாரம், நிலைமை திடீரென தலைகீழானது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் தலைவராக, கெவின் வார்ஷ் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்ததால், அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. இது டாலர் மதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பில் மேற்கொள்ளப் படும், தங்கத்தின் 'டிபேஸ்மென்ட் டிரேட்' நம்பிக்கையை பலவீனப்படுத்தியது.
அதேநேரம், பரிவர்த்தனைக்கான மார்ஜின் தேவை உயர்ந்ததால், விற்பனை தீவிரமடைந்தது. குறிப்பாக வெள்ளியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இருந்தாலும், குறைந்த விலையில் தங்கம், வெள்ளியை வாங்குவதற்கான ஆர்வம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து. இது, தங்கம், வெள்ளி விலை மீட்சிக்கு வழிவகுத்தது.
வர்த்தகர்கள், தொடர்ந்து தங்கள் கையிருப்புகளை வேகமாக விற்க முயல்வார்கள் என்பதாலும், அமெரிக்க தரவுகள், டாலர், பெடரல் ரிசர்வின் கொள்கை அறிவிப்புகள் வாயிலாக இன்னும் தெளிவான சமிக்ஞைகள் பெறுவதற்காக, தொடர்ந்து காத்திருப்பர் என்பதாலும் தங்கம், வெள்ளியின் இந்த விலை உயர்வு உடனடியாக முடிவுக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.

