ADDED : ஜன 13, 2026 01:58 AM

பி.எப்., திட்டத்தில், ஊதிய உச்சவரம்பை 15,000ல் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.எப்., திட்டத்தில் சேர ஊதிய உச்சவரம்பு, 15,000 ரூபாயாக கடந்த 2014ல் உயர்த்தப்பட்டது. அதாவது, அதற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கும், உச்சவரம்பு அடிப்படையில் நிறுவனம் தன் பங்கை செலுத்தலாம்.
ஒருவர் 50,000 ரூபாய் மாத ஊதியம் பெற்றாலும், 15,000 ரூபாய் அடிப்படையில் 12 சதவீத தொகை சந்தாவாக பிடிக் கப்படும்; நிறுவனமும் அதே அளவுக்கு செலுத்தும்.
இது, 10 ஆண்டுகளாக அமலில் உள்ள நிலையில், அதை அதிகரிக்க பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது; தொழிலாளர் நல சங்கங்களும் கோரிக்கை விடுத்தன.
அதேபோல், இ.எஸ்.ஐ., எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில், பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு 21,000 ரூபாயாக உள்ள நிலையில், இதையும் அதிகரிக்க கோரிக்கை உள்ளது.
இதையடுத்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., இரண்டுக்கும் ஒரே சீரான ஊதிய வரம்பை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
பணவீக்கம், தொழிலாளர்களின் செலவினங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, உச்சவரம்பை 25,000 முதல் 30,000 ரூபாய் வரை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுஉள்ளதாக தெரிகிறது.
இதனால், தொழில் நிறுவனங்கள் ஊழியருக்காக செலுத்தும் 12 சதவீத தொகை அதிகரிக்கும் என்பதால், தொழிலாளரின் ஓய்வூதிய தொகையும், மொத்த சேமிப்பும் அதிகரித்து, ஓய்வுக்காலத்தில் பயன் கிடைக்கும்.
பி.எப்., சந்தாதாரர்கள்: 8.50 கோடி
தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் உள்ளோர்: 3.25 கோடி

