மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?
மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?
UPDATED : மார் 16, 2026 01:38 AM
ADDED : மார் 16, 2026 01:23 AM

மியூச்சுவல் பண்டு விஷயத்தில், சிறு முதலீட்டாளர்கள் சந்திக்கும் மிக முக்கியமான கேள்வி, எந்த பண்டு திட்டத்தை வாங்குவது என்பது தான். 52 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான பண்டு திட்டங்கள் உள்ளன. இவற்றில் எனக்கான திட்டம் எது, தெரிந்தவர்களை கேட்கலாமா, மியூச்சுவல் பண்டு முகவர்களை கேட்கலாமா, அவர்கள் சொல்வது நமக்கு பொருத்தமான பண்டுதானா... முதலீட்டாளர்கள் மனத்தில் எழும் கேள்விகளுக்கு அளவே இல்லை.
ஆனால், மியூச்சுவல் பண்டை தேர்வு செய்வதில் ஒருசில தங்க விதிகள் உள்ளன. சற்றும் பிசகாமல், அவற்றை பின்பற்றினால் போதும். சந்தை அபாயங்களை கடந்து, நல்ல வருவாயை ஈட்டித் தரும் பண்டு திட்டங்களை கண்டுபிடித்துவிட முடியும்.
பண்டு மேலாளர் ஒரு பண்டு திட்டம் என்ற முரட்டு குதிரையை ஓட்டும் ஜாக்கி தான் பண்டு மேலாளர். அவருக்கு நீண்டகால அனுபவம் இருக்க வேண்டும். பங்குச்சந்தையின் பல்வேறு காலகட்ட ஏற்ற இறக்கங்களை கண்கூடாக பார்த் தவராக இருப்பது அவசியம்.
அவர் தனது அனுபவத்தின் வாயிலாக, எத்தகைய இடர்கள் வந்தாலும் சந்திப்பார். தனது முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி தருவதையே தனது பிரதான நோக்கமாக கொண்டு செயல்படுவார். அத்தகைய பண்டு மேலாளர்கள் தான் முதல் சாய்ஸ்.
பண்டு அளவு
ஒரு பண்டு திட்டத்தில் ஏராளமாக பணம் கொட்டி கிடந்தாலும் சிரமம் தான். உதாரணமாக, 'மிட்கேப்' மற்றும் 'ஸ்மால் கேப்' பண்டு திட்டங்களில், ஏராளமான பணம் இருக்கிறது என்று கருதுவோம்.
பங்குச்சந்தை வீழ்ச்சி யை சந்திக்கும்போது, எல்லா முதலீட்டாளர்களும் முட்டி மோதிக்கொண்டு, பணத்தை வெளியே எடுக்க முயல்வர். அப்போது, இத்தகைய பெரிய பண்டு திட்டங்களில் பணநெருக்கடி ஏற்படும்.
முதலீட்டாளர்கள், இந்த விஷயத்தையும் முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர் வருவாய் பண்டு திட்டத்தை தேர்வு செய்யும்போது, பல முதலீட்டாளர்கள், கடந்த ஓராண்டில் அந்த பண்டு திட்டம் என்ன வருவாயை ஈட்டித் தந்திருக்கிறது என்று மட்டும் பார்ப்பர். இது சரியான அளவுகோல் அல்ல.
கடந்த 3, 5, 10 ஆண்டு காலத்தில் அதே பண்டு திட்டம் என்ன வருவாயை ஈட்டித் தந்திருக்கிறது என்று கவனிப்பதே சரியான மதிப்பீடாக இருக்கும்.
சுழற்சி
ஒரு பண்டு திட்டத்தில் பல பங்குகள் இருக்கும். மதிப்புமிக்க புதிய பங்குகள், சல்லிசான விலையில் கிடைக்கும் போது, ஏற்கனவே லாபம் பெற்றுக்கொடுத்துவிட்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, புதிய பங்குகள் வாங்கப்படும்.
இதனை 'போர்ட்போலியோ விற்றுமுதல் விகிதம்' என்று அழைப்பர். இது ஆண்டு ஒன்றுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அதாவது, நல்ல பங்குகளை நீண்டகாலம் வைத்திருந்தால் தான் வருவாய் பெறமுடியும்.
பீட்டா ஒரு பண்டு திட்டம் எப்போதும் ஏதேனும் ஒரு பங்குச்சந்தை குறியீடுடன் ஒப்பிடப்படும். குறியீடு தான் அடித்தளம். அந்த அடித்தளத்துக்கு இணையாக பண்டு திட்டமானது நகர்கிறதா என்பதை கணிப்பது தான் 'பீட்டா' என்ற மதிப்பீடு.
ஷார்ப் விகிதம்
'ஷார்ப் ரேஷியோ' என்பது ஒரு மியூச்சுவல் பண்டுத் திட்டத்தின் 'ஆபத்து - சரிசெய்யப்பட்ட வருவாயை' அளவிடும் விகிதம் ஆகும். ஷார்ப் விகிதம் அதிகமாக இருந்தால், அந்தப் பண்டு திட்டமானது, எடுத்த ரிஸ்க்கை விடக் கூடுதல் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
சோர்டினோ விகிதம்
இந்த விகிதம், முதலீட்டாளர்கள் சந்திக்க கூடிய வீழ்ச்சி / சரிவு அபாயத்தை ஒட்டியது. அதாவது, பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும்போது, ஒரு பண்டு திட்டமானது, எப்படி முதலீட்டாளர்களை காக்கிறது என்பதை இந்த விகிதத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
எனவே, நீங்கள் ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்வு செய்யும்போது, அதிக 'சோர்டினோ' விகிதம் உள்ள திட்டத்தை தேர்ந்தெடுப்பது, குறைந்த வீழ்ச்சி அபாயத்துடன் கூடிய நல்ல வருமானத்தைப் பெற உதவும்.
ஆல்பா
பண்டு திட்டத்தை நிர்வகிக்கும் மேலாளர்கள், எப்போதும், அந்த பண்டுக்கு அடிப்படையாக உள்ள குறியீட்டை விட கூடுதல் லாபம் சம்பாதித்துத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 'ஆல்பா' என்பது அந்த விகிதத்தை குறிப்பிடுகிறது.
ஆலோசனைகள்
உங்கள் போர்ட்போலியோவில் ஐந்து பண்டு திட்டங்களுக்கு மேல் வேண்டாம். திறமையான பண்டு மேலாளர்களை கொண்ட திட்டங்கள், அடிப்படை குறியீட்டை விடக் கூடுதல் லாபம் சம்பாதித்து தரும்.
ஏராளமான பண்டு திட்டங்களில் முதலீடு செய்தால், அவை அடிப்படை குறியீடு என்ன அளவுக்கு வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு மட்டுமே வருவாய் பெற்றுத் தரும்.
மேலே தெரிவிக்கப்பட்ட விகிதங்களை எல்லாம் எங்கே போய் பார்ப்பது என்ற கேள்வி எழலாம். ஒவ்வொரு பண்டு நிறுவனமும் இந்த விபரங்களை தங்கள் வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாதமும், தங்களுடைய போர்ட்போலியோவில் என்ன மாறுதல்களை செய்துள்ளோம் என்பதை முதலீடு செய்தவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு உள்ளது. அதன்படியும், தகவல்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விழும்.


