போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றம் முதலீட்டாளர்கள் உற்சாகம்
போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றம் முதலீட்டாளர்கள் உற்சாகம்
ADDED : மே 07, 2026 03:05 AM

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்து, அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், இந்திய பங்கு சந்தைகள் நேற்று கணிசமாக உயர்ந்தன. சென்செக்ஸ் 940 புள்ளிகள் உயர்ந்து 77,958 என்ற நிலையிலும், நிப்டி 298 புள்ளிகள் அதிகரித்து 24,330 புள்ளிகளிலும் முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள, 'இன்டர் குளோப் ஏவியேஷன், டிரெண்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி., வங்கி மற்றும் எட்டர்னல்' ஆகியவை உயர்வுடன் முடிந்தன.
ஏற்றத்துக்கான காரணங்கள்
1. போர் நிறுத்தத்துக்கான முதற்கட்ட வரைவு ஒப்பந்தம் இறுதியாக உள்ளதாக வெளியான தகவல்
2. மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததால், கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் சரிந்தது
3. சிறு தொழில்கள், விமான போக்குவரத்து துறைக்கு அரசு ரூ.18,100 கோடி கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்ததால் வங்கி பங்குகள் உயர்வு
4. நிறுவனங்களின் வலுவான காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு
5. சந்தையின் ஏற்ற இறக்கத்தை குறிக்கும் இந்தியா வி.ஐ.எக்ஸ்., 5 சதவீதம் சரிந்தது.
6. மற்ற ஆசிய பங்கு சந்தைகளும் உயர்வுடன் காணப்பட்டன
7. இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
சாதகமான அறிகுறி
நிப்டி 24,150 என்ற நிலைக்கு மேல் நீடித்திருப்பது சாதகமான அறிகுறி; வரும் நாட்களில் நிப்டி 24,334 என்ற புள்ளிகளை தாண்டினால் மேலும் வலுவான உயர்வை எதிர்பார்க்கலாம் என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
வோடபோன் ஐடியா 5% உயர்வு
'வோடபோன் ஐடியா' நிறுவனத்தின் செயல் சாரா தலைவராக குமார் மங்கலம் பிர்லா பொறுப்பேற்றுள்ளார். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்நிறுவன பங்கு ஒன்றின் விலை 4.63 சதவீதம் உயர்ந்து 11.30 ரூபாயாக ஏற்றம் கண்டது
எல் அண்டு டி; பங்குகள் 4% சரிவு
மார்ச் காலாண்டில் லாபம் 3 சதவீதம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, 'எல் அண்டு டி' நிறுவன பங்குகள் 3.84 சதவீதம் சரிந்தன. வர்த்தக நிறைவில் பங்கு ஒன்றின் விலை 1.13 சதவீதம் சரிந்து 4,008.50 ரூபாயாக முடிந்தது. தற்போதைய புவிசார் அரசியல் பதற்றத்தால் லாபம் சற்று குறைந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
