
ஐ.பி.ஓ.,வுக்கு வரும் 'சத்யா ஏஜென்சீஸ்'
துாத்துக்குடியை சேர்ந்த 'சத்யா ஏஜென்சீஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு செபியிடம் 'டி.ஆர்.ஹெச்.பி.,' ஆவணங்களை சமர்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டின் வாயிலாக மொத்தம் 600 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. ஓ.எப்.எஸ்., முறையில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட இருக்கின்றன. கடன்களை அடைக்கவும், நிறுவனத்தின் இதர வளர்ச்சி தேவைகளுக்கும் இந்த நிதியை இந்நிறுவனம் பயன்படுத்தும் என தெரிகிறது.
ரூ.5,000 கோடி திரட்ட 'ஜெட்வெர்க்' முயற்சி
'ஜெட்வெர்க் மேனுபேக்சரிங் பிசினஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு, தனது முதற்கட்ட விண்ணப்பத்தை செபியிடம் ரகசியமான முறையில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ., வாயிலாக 4,000 - 5,000 கோடி ரூபாய் வரை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதில் புதிய பங்கு வெளியீடு மற்றும் ஓ.எப்.எஸ்., விற்பனை ஆகிய இரண்டும் இருக்கும்.
ரூ.650 கோடி திரட்டும் 'காஸ்மிக் பி.வி., பவர்'
'காஸ்மிக் பி.வி., பவர்' நிறுவனம், 650 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில், ஐ.பி.ஓ.,வுக்கு செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதில், 450 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. ஓ.எப்.எஸ்., முறையில் 190 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட இருக்கின்றன.
செபியிடம் அனுமதி கோரும் 'குஜராத் விக்டரி போர்ஜிங்ஸ்'
'குஜராத் விக்டரி போர்ஜிங்ஸ்' நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக பங்குச்சந்தை வாயிலாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில் 65 லட்சம் புதிய பங்குகளும், ஓ.எப்.எஸ்., முறையில் 1.32 கோடி பங்குகளும் வெளியிடப்படுகின்றன.

