UPDATED : டிச 04, 2025 01:06 AM
ADDED : டிச 04, 2025 01:01 AM

அக்கஸ் பங்குகளுக்கு அமோக வரவேற்பு
ஐ. பி.ஓ., வந்த முதல் நாளான நேற்று, அக்கஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பங்கு ஒன்றின் விலை 118--124 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 0.66 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 3 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 11 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, அக்கஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வித்யா ஒயர்ஸ் பங்குகளுக்கு 2 மடங்கு விண்ணப்பம்
நேற்று புதிய பங்கு வெளியீடுக்கு வந்த குஜராத்தைச் சேர்ந்த 'வித்யா ஒயர்ஸ்' நிறுவனத்தின் பங்குகள் கேட்டு, முதல் நாளில் 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 300 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வந்த இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, 48- 52 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 4.33 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், முதல்நாளிலேயே 9.98 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வரும் 10ம் தேதி, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
மீஷோ பங்கு விண்ணப்பம் மந்தமாக துவங்கியது
ஆன்லைன் வர்த்தக தளமான மீஷோவின் பங்குகள் கேட்டு, முதல் நாளான நேற்று 2 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட 5,421 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட நேற்று ஐ.பி.ஓ., வந்த மீஷோவுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு மந்தமாக இருந்தது. நாள் முடிவில் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் பிரிவில் 2.12 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 1.80 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 3.85 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா ரெமடீஸ் பங்கு விலை நிர்ணயம்
குஜராத்தின் ஆமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான கொரோனா ரெமடீஸ் முழுதும் 'ஆபர் பார் சேல்' முறையில், 655.37 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 1008--1062 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் 8 முதல் 10ம் தேதி வரை முதலீட்டாளர்கள், பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். டிச.15ம் தேதி இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.ஓ., வருகிறது நெப்ரோபிளஸ் ஹெல்த்கேர்
ஹைதராபாதை தலைமையிடமாக கொண்டு, டயாலிசிஸ் சேவைகளை வழங்கி வரும் நெப்ரோபிளஸ் ஹெல்த்கேர், பங்குதாரர்கள் வசமுள்ள 1.12 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 353 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வரவுள்ளது. வரும் 10 முதல் 12ம் தேதி வரை பங்குகள் கேட்டு, முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.பி.ஓ.,வாயிலாக திரட்டும் தொகையை, 129 கோடி ரூபாயை புதிய டயாலிசிஸ் கிளினிக் அமைக்கவும், 136 கோடி ரூபாயை கடன்களை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

