தங்கம் என்பது பொருளா, பணமா? பல கேள்விகளை முன்வைக்கும் எஸ்.பி.ஐ.,
தங்கம் என்பது பொருளா, பணமா? பல கேள்விகளை முன்வைக்கும் எஸ்.பி.ஐ.,
ADDED : நவ 05, 2025 10:34 PM

தங்கத்தை ஒரு பொருளாகக் கருத வேண்டுமா அல்லது பணமாகப் பார்க்க வேண்டுமா; வாடிக்கையாளர்கள் அதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி, நம் நாடு தெளிவான ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அது மேலும் பல்வேறு கோணங்களையும், கேள்விகளையும் முன்வைக்கிறது.
உலகின் மேற்குலக, கிழக்குலக நாடுகள் இடையே, தங்கத்தைப் பற்றி புரிதல்கள் வேறுபட்டுள்ளன. மேற்குலக நாடுகளில் தங்கம், ஒரு பொதுச்சொத்து. ஆனால் கிழக்குலக நாடுகள், குறிப்பாக, இந்தியா, ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில், அது இன்னமும் தனிநபர் சொத்தாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது, தங்கத்தின் தேவையைக் குறைப்பதற்கும், ஏற்கனவே இருக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்கும் முன்னுரிமை அளிப்பதாகவே, நம் நாட்டில் தங்க கொள்கை இருக்கிறது.
தங்கம் நேரடியாக மூலதன உருவாக்கத்துக்கு பங்களிப்புச் செய்வதில்லை என்பதால், அதை விற்றுப் பணமாக்கி, மூலதனமாக்குவதே எதிர்கால முதலீடுகளைச் சமாளிப்பதற்கான வழியாக பார்க்கப்படுகிறது.
சீனாவிடம் 2,300 டன் தங்கம் இருக்கிறது. ஆனால், நம் நாட்டின் கருவூலத்திலோ 880 டன் தங்கம் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மீதான கொள்கையை சீனா உருவாக்கி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
வீட்டில் தங்கத்தை வைத்திருக்கும் விஷயத்தில், சீன குடும்பங்கள் சராசரியாக 10 கிராமுக்கும் குறைவான தங்கத்தையே வைத்துள்ளன. அவர்களுடைய இலக்கே 20 கிராம் தங்கத்தைச் சேமிப்பது தான். ஆனால், இந்திய குடும்பம் ஒவ்வொன்றிலும் சராசரியாக 25 கிராம் தங்கம் இருக்கிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை அல்லது உபரி ஆகிய விஷயங்களோடு, வீடுகளில் உள்ள தங்கம் தொடர்பான கொள்கையை சீனா வரையறை செய்துள்ளது. ஆனால், இந்தியாவிலோ, இந்தக் கொள்கை, நேரத்துக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது.
சீனாவில் உள்ள வங்கிகள், தங்கத்தின் உற்பத்தியிலும் வினியோக தொடரிலும் பல்வேறு நிலைகளில் பங்களிப்புச் செய்கின்றன. இந்தியாவில், ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழிலுக்கோ, ஏற்றுமதிக்கோ, தங்கச் சேமிப்புகளுக்கோ, வங்கிகள் முதலீடு செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
தங்கத்தின் உற்பத்தியிலும் சீனாவே உலக அளவில் முன்னணியில் இருக்கிறது.
மேலும், அங்கே தங்க மதிப்பீடுக்கான வசதிகளும் பெருகியுள்ளன. இந்தியாவிலோ தங்க உற்பத்தி வெகு சொற்பம். மத்திய பிரதேசம், ஒடிஷா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூமிக்கடியில் பெருமளவு தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
சீனா, லண்டன் புல்லியன் மார்க்கெட் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினராக இருப்பதால், அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியா இந்த கூட்டமைப்பில் உறுப்பினர் இல்லை. ஆனால், உலக அளவில் தங்க ஆபரண ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.
இதுவரை இந்தியாவில் வெளியான மூன்று அறிக்கைகள், அதாவது, 1992ல் வெளியான ஆர்.பி.ஐ.,யின் உள்சுற்று அறிக்கை மற்றும் தராப்பூர் குழுவின் இரண்டு அறிக்கைகள் ஆகியவை மட்டுமே தங்கத்தைப் பற்றி தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தன.
இந்த முந்தைய அறிக்கைகள், புவி அரசியலில் தங்கம் பெற்றுள்ள முக்கியத்துவத்தை காணத் தவறிவிட்டன. அதேபோல், ஏராளமான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கிவரும் தங்க நகைத் துறையினரின் ஆலோசனைகள் ஏதும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் போது, கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது, தங்கத்தின் பொருளாதார, பண்பாட்டு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் புதிய அணுகுமுறையுடன் தொலைநோக்குப் பார்வையுடன் தங்கத்தின் மீதான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு எஸ்.பி.ஐ., அறிக்கை தெரிவிக்கிறது.
மேற்குலக நாடுகளில் தங்கம், ஒரு பொதுச்சொத்து. ஆனால், கிழக்குலக நாடுகள், குறிப்பாக, இந்தியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில், அது இன்னமும் தனிநபர் சொத்தாகவே பார்க்கப்படுகிறது
வீடுகளில் உள்ள தங்கம் தொடர்பான கொள்கையை சீனா வரையறை செய்துள்ளது. ஆனால், இந்தியாவிலோ, இந்தக் கொள்கை, நேரத்துக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது.

