நிலைக்குமா இந்த ஏற்றமும் மாற்றமும்? மூன்று நாள் சரிவுக்கு பின் உயர்வு
நிலைக்குமா இந்த ஏற்றமும் மாற்றமும்? மூன்று நாள் சரிவுக்கு பின் உயர்வு
ADDED : மார் 17, 2026 01:26 AM

இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்கு பின், நேற்று ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 938 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 257 புள்ளிகள் அதிகரித்து 23,408 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
ஆட்டோ, வங்கி மற்றும் எப்.எம்.சி.ஜி., போன்ற உள்நாட்டு சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 'வேல்யூ பையிங்' இதற்கு ஆதரவாக இருந்தது. குறிப்பாக. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், 'அல்ட்ராடெக் சிமென்ட் 4.22 சதவீதம் அதிகரித்தது.
'டிரெண்டு, ஹெச்.டி.எப்.சி., வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எட்டர்னல், பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களும் ஏற்றத்துடன் காணப்பட்டன.
இருப்பினும், மேற்காசிய போரின் நகர்வு, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும் சந்தைகளுக்கு சவாலாகவே தொடர்கிறது. இதனால் இந்த ஏற்றம் நிலைக்குமா என்பதில் சந்தேகமே நிலவுகிறது.
பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் இறுதியில் நல்ல மீட்சியை பதிவு செய்துள்ளன. வரும் காலங்களில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே, முதலீட்டாளர்களின் விருப்பங்கள் அமையும்
- வினோத் நாயர், ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், சந்தையில் இன்னும் எச்சரிக்கை உணர்வு நிலவுகிறது. மேலும், அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் மற்றும் நாணய ஏற்ற இறக்கம் ஆகியவை முதலீட்டு ஆர்வத்தை கட்டுக்குள் வைத்துள்ளன
- அஜித் மிஸ்ரா, ரெலிகேர் புரோக்கிங்
