'மினிமம் பேலன்ஸ்' அபராதத்தை நீக்க ஆர்.பி.ஐ.,க்கு லோக்சபா குழு பரிந்துரை
'மினிமம் பேலன்ஸ்' அபராதத்தை நீக்க ஆர்.பி.ஐ.,க்கு லோக்சபா குழு பரிந்துரை
ADDED : பிப் 13, 2026 01:55 AM

ச ே மிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்காக, வங்கிகள் விதிக்கும் அபராதங்களை ரத்து செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு 'லோக்சபா குழு' பரிந்துரைத்துள்ளது.
மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது, குறைந்தபட்ச இருப்புத்தொகை விதிகளை ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக நிர்ணயித்து வருகின்றன. பல தனியார் வங்கிகளில் 2,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பதற்கு பதிலாக, தொடர்ந்து அதிக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு பாயின்ட்ஸ், கட்டண தள்ளுபடி, கூடுதல் வட்டி போன்ற ஊக்கங்கள் வழங்கலாம்.
மேலும், “சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான படிவங்கள், விளக்க புத்தகங்கள், இணையதளம், மொபைல் ஆப்கள் மற்றும் கிளை அறிவிப்பு பலகைகளில் குறைந்தபட்ச இருப்பு, ஏ.டி.எம்., பயன்பாடு, எஸ்.எம்.எஸ்., அலர்ட், டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணங்கள் உள்ளிட்ட விவரங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களின் புகார்கள் 3 வேலை நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்; எந்த நிலையிலும் 7 வேலை நாட்களை தாண்டக்கூடாது. குறைந்த கல்வித் திறன் கொண்டோர் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்காக எஸ்.எம்.எஸ்., மற்றும் தொலைபேசி வழியாக எளிதாக புகார் அளிக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

