ADDED : பிப் 27, 2026 07:43 AM

நாளுக்குநாள் குவிந்து வரும் மியூச்சுவல் பண்டு திட்டங்களால் முதலீட்டாளர்கள் குழப்பம் அடைவதை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்வும், செபி மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், ஹைபிரிட், லைப் சைக்கிள் பண்டு, இண்டெக்ஸ் / இ.டி.எப்., என, மியூச்சுவல் பண்டு திட்டங்கள் இனி ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வகைப்படுத்தப்படும். இந்த புதிய விதிமுறைகளை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:
சொல்யூஷன் ஓரியன்டட் பண்டு:
ஓய்வூதியம் மற்றும் குழந்தைகள் எதிர்காலத்திற்கான திட்டங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. இத்திட்டங்கள் இனி புதிய சந்தாக்களை ஏற்காது மற்றும் ஒத்த முதலீட்டு முறையுள்ள பிற திட்டங்களுடன் இணைக்கப்படும்.
லைப் சைக்கிள் பண்டு:
முதலீட்டாளரின் வயது மற்றும் இலக்குக்கு ஏற்ப முதலீட்டு முறை தானாகவே மாறும். உதாரணத்திற்கு, இந்த வகை பண்டுகளில், முதலீட்டாளர் சிறுவயதில் இருக்கும்போது ஈக்விட்டியில் அதிக முதலீடு செய்யப்படும்; அவருக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
குறிப்பாக, வயதான காலத்தை நெருங்கும்போது, ரிஸ்கை குறைக்க அந்த முதலீடு தானாகவே பாதுகாப்பான கடன் பத்திரங்களுக்கு மாற்றப்படும். இந்த திட்டங்கள் ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை இலக்கு கொண்டவையாக இருக்கும்.
இண்டெக்ஸ் / இ.டி.எப்., பண்டு:
இத்திட்டங்களில், குறைந்தபட்சம் 95 சதவீத தொகையை அந்த குறிப்பிட்ட குறியீட்டில் உள்ள நிறுவனங்களிலேயே முதலீடு செய்யப்பட வேண்டும்.
வெளிநாட்டுப் பங்குகள்:
இனி, வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு என்பது ஒரு தனி சொத்து பிரிவாக கருதப்படாது.
போர்ட்போலியோ ஒற்றுமை:
ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு திட்டங்கள் எவ்வளவு ஒத்த பங்குகளை கொண்டுள்ளன என்பதை, நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
வேல்யூ மற்றும் கான்ட்ரா பண்டுகள்:
ஒரு நிறுவனம் இந்த இரண்டு திட்டங்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம். ஆனால் அவற்றுக்கு இடையே உள்ள பங்குகளின் ஒற்றுமை, 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய அனுமதி:
இதற்கு முன்பு ஒரு பண்டு மேலாளர், திட்டத்தின் முக்கிய முதலீடு போக மீதமுள்ள பணத்தை வெறும் கடன் பத்திரங்களில் மட்டுமே வைத்திருக்க முடியும். இந்நிலையில், அந்த பணத்தை தங்கம், வெள்ளி இ.டி.எப்.,கள், உட்கட்டமைப்பு அறக்கட்டளைகள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

