ADDED : மே 29, 2026 12:31 AM

ஐ . பி.ஓ., உள்ளிட்ட பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டும் நிறுவனங்கள், அந்த நிதியை எப்படி பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கும் விதிகளை கடுமையாக்க செபி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, நிறுவனங்கள் நிதியை எப்படி பயன்படுத்துகின்றன என்பதை, 'கிரெடிட் ரேட்டிங்' நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், நிதி பயன்பாடு பற்றிய விபரங்களை நிறுவனங்கள் வெளியிட கட்டாயம் இல்லை என்பதால் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, நிறுவனங்கள் கட்டாயமாக தகவல்களை வெளியிட வேண்டும் என விதிமுறையை மாற்ற செபி திட்டமிட்டுள்ளது. ஒத்துழைக்க மறுக்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் அறிக்கைகளை நேரடியாக பங்கு சந்தைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை, 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டாய கண்காணிப்பு இருந்தது. இந்த வரம்பை, 50 கோடி ரூபாயாக குறைக்க செபி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
