ADDED : மார் 10, 2026 01:24 AM

இ ந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வுடன், அமெரிக்க டாலரும் வலுவடைந்து வருவது, வளர்ந்து வரும் சந்தை நாணயங்கள்மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. டாலர் குறியீடு தற்போது 99.00 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றுள்ளது.
மத்திய கிழக்கு எரிசக்தியை, ஐரோப்பா அதிகம் சார்ந்துள்ளதால், தற்போதைய எண்ணெய் விலை உயர்வின் போது யூரோ மதிப்பு பலவீனமடைந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் யூரோ 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. டாலர் குறியீட்டில் யூரோவின் பங்கு 57 சதவீதம் என்பதால், அதன் பலவீனம் தானாகவே டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
மேலும், உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் டாலர் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதாலும், அமெரிக்கா தற்போது ஒரு பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக இருப்பதாலும், எண்ணெய் விலை உயர்வு டாலருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறுவதும் டாலருக்கான தேவை இயல்பாகவே உயர்ந்து, ரூபாயின் மதிப்பை மேலும் குறைக்கிறது.
இந்தச்சூழலில், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, இந்த வாரத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 1.10 லட்சம் கோடி ரூபாயை பயன்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ரூபாய் மேலும் சரிவதை தடுத்து, மீண்டு வர உதவியது.
தற்போது இந்தியாவின் கையிருப்பு கிட்டத்தட்ட 67 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ரூபாயை நிலைப்படுத்த தேவையான வலிமையை வழங்குகிறது.
ரூபாய் மதிப்பு வரும் நாட்களில், 91.40 - 91.50 என்பது வலுவான ஆதரவு மண்டலமாக இருக்கும். போர் பதற்றம் நீடித்தால், ரூபாயின் மதிப்பு படிப்படியாக 92.50 - 93.00 நிலைகளை நோக்கி நகரக்கூடும்.

