UPDATED : ஆக 21, 2026 03:38 AM
ADDED : ஆக 21, 2026 02:58 AM

அ மெரிக்க அரசு பத்திரங்களின் வருமானம் குறைந்ததை தொடர்ந்து, இந்திய பங்கு சந்தையில் வெள்ளி இ.டி.எப்., பங்குகள் நேற்று, 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் வெள்ளி இ.டி.எப்.,கள் 8 சதவீதத்துக்கு மேலும், தங்கம் இ.டி.எப்.,கள் 9 சதவீதத்துக்கு மேலும் லாபம் அளித்துள்ளன.
அமெரிக்க அரசு, சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியதால், அந்நாட்டின் 30 ஆண்டுகால கடன் பத்திர வருவாய், 5.30 சதவீதத்திலிருந்து 5.18 சதவீதமாக குறைந்தது. இது, தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
![]() |
அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் கடன் பத்திர வருவாய் குறையும் போது தங்கம், வெள்ளி மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிக்கும். வெள்ளி என்பது ஆபரண பொருளாக மட்டுமின்றி தொழில்துறை மூலப்பொருளாகவும் பயன்படுவதால், தங்கத்தை விட வேகமாக ஏற்ற இறக்கம் காணும் இயல்புடையது. எனவே, போர்ட்போலியோவை விரிவுபடுத்த விரும்புபவர்கள், மொத்த முதலீட்டில் 5 முதல் 10 சதவீத தொகையை இத்தகைய தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,களில் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வது நல்ல பாதுகாப்பான வழிமுறையாக இருக்கும் என, இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

