ADDED : மார் 18, 2026 01:14 AM

இ ந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான 'டாடா ஏ.ஐ.ஏ.,', உயர்கல்விக்காக கடன் வாங்கும் மாணவர்களுக்கு என, ஏற்கனவே உள்ள, 'சம்பூர்ண ரக்ஷா பிராமிஸ்' திட்டத்தின் கீழ், புதிய 'டேர்ம் பிளான்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கல்விக்கடன் வாங்காத மாணவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். அத்தகைய மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் காப்பீட்டு தகுதியில் 50 சதவீதம் அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என, நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கல்விக்கடன் என்பது, அதை வாங்கும் மாணவர்களுக்கான ஒரு நிதி பொறுப்பு. ஒருவேளை அந்த மாணவருக்கு எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த கடனை திருப்பி செலுத்தும் சுமை பெற்றோர் மீது விழக்கூடாது என்பதற்காக, இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்” என, டாடா ஏ.ஐ.ஏ.,வின் செயல்பாட்டு பிரிவின் தலைவர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
யாருக்கு பொருந்தும்: இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை படிக்கும் 18 முதல் 25 வயது வரையிலான மாணவர்களுக்கு.
எவ்வளவு தொகை: அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை. ஆனால், இது மாணவர் வாங்கியுள்ள கடன் தொகைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பாலிசியின் காலம்: அதிகபட்சம் 10 ஆண்டுகள்
தேவைப்படும் ஆவணங்கள்: கல்லுாரி சேர்க்கை சான்றிதழ், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீதுகள், வங்கியின் கடன் அனுமதி கடிதம். கடன் வாங்காதவர்கள், பெற்றோரின் 3 ஆண்டுகால வருமான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

