கேள்விக்குள்ளாகும் நிறுவனங்களின் மதிப்பு ஐ.பி.ஓ., குறித்து தொடர்ந்து எழும் சர்ச்சைகள்
கேள்விக்குள்ளாகும் நிறுவனங்களின் மதிப்பு ஐ.பி.ஓ., குறித்து தொடர்ந்து எழும் சர்ச்சைகள்
ADDED : நவ 07, 2025 06:36 PM

அண்மை காலமாக ஏராளமான நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,வுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது அந்நிறுவனங்களின் மதிப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பங்குச் சந்தைக்கு வரும் பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக மிக அதிகமான மதிப்பையே காண்பிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில், 'லென்ஸ்கார்ட்' நிறுவனம் 7,278 கோடி ரூபாய் திரட்ட புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது.
ஆனால், அது இந்த ஆண்டு ஈட்டக்கூடிய வருவாயை போல் 235 மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும், மக்கள் இப்பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். கிட்டத்தட்ட 28 மடங்குக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.
சிறு முதலீட்டாளர்கள் அடுத்து இதே போன்ற ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனம் குரோவ். அது ஏற்கனவே சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 'ஏஞ்சல் ஒன்' போன்ற இதே துறை சார்ந்த நிறுவனங்களை விட, மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
கடந்த ஆண்டுகளிலும் இதே சூழல் ஏற்பட்டுள்ளது. 'நைக்கா, சொமாட்டோ, பேடிஎம்' போன்ற நிறுவனங்கள் சந்தைக்கு வந்தபோது, அது குறித்து பிரமாதமாக பேசப்பட்டது. ஆனால், சந்தையில் பட்டியலிடப்பட்ட சில மாதங்களிலேயே அவற்றின் விலை, படு பாதாளத்துக்கு பாய்ந்தன.
பெரிய லாபம் பார்க்க முடியும் என்ற கற்பனையில் இத்தகைய பங்குகளை வாங்கிய சிறு முதலீட்டாளர்கள், தலையில் துண்டை போட்டுக்கொண்டு போனது தான் மிச்சம். சிறு முதலீட்டாளர்கள் கதை இப்படி என்றால், பல மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் இத்தகைய ஐ.பி.ஓ.,க்களில் அதீத ஆர்வம் காட்டுகின்றன.
சாதாரணமானவர்களுக்கே இது போன்ற நிறுவனங்களின் மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது என்று தெரியும்போது, போதுமான ஆய்வு தரவுகளையும், ஆய்வாளர்களையும் வைத்திருக்கும் பண்டு நிறுவனங்கள், எப்படி இப்படி ஆர்வம் காட்டுகின்றன என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அதுவும் முதலீட்டாளர்களுடைய வியர்வையில் சேர்ந்த பணத்தை கொண்டு போய் முதலீடு செய்யும் போது, இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது இயல்பே.
நாளை இந்த பங்குகளின் விலைகள் சரியும்போது, அது பண்டின் லாப விகிதத்தை சீர்குலைத்து விடுமே என்ற கவலை பலருக்கும் இருக்கிறது.
ஆனால், மியூச்சுவல் பண்டு மேலாளர்கள், இதற்கு வேறொரு விளக்கம் தருகின்றனர். 'நாங்கள் ஒன்றும் அதிக பணம் போடவில்லை. தேனா இல்லை வெறும் தண்ணீரா என்று சாம்பிள் பார்ப்பதற்காக, 25 அல்லது 50 கோடி ரூபாய் போட்டு பார்ப்போம்.
பாதிப்பு இருக்காது 'பெரிய அளவில் வளர்ச்சி இல்லையெனில், அதை விற்றுவிட்டு வெளியே வந்துவிடுவோம். இத்தகைய முதலீடுகள், எங்களுடைய ஒட்டுமொத்த போர்ட்போலியோவில் 0.1 சதவீதம் கூட கிடையாது; அதனால், முதலீட்டாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது' என்கின்றனர்.
இதற்கிடையே, நிறுவனர்களும் ஆரம்ப கால முதலீட்டாளர்களும், தாங்கள் லாபத்துடன் வெளியேறுவதற்காக, ஐ.பி.ஓ.,வை ஒரு வழியாக பயன்படுத்துகின்றனரோ என்ற சந்தேகமும் தொடர்ச்சியாக சந்தையில் நிலவி வருகிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, அடிப்படை கேள்வி என்னவோ அது அப்படியே இருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுடைய முதலீடு இல்லாமல், புதிய பங்கு வெளியீடுகள் வெற்றி பெறாது. ஆனால், அவர்களுடைய நிதி பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
செபி தான் அந்த பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், செபியும் தற்போது கைவிரித்து விட்டது.

