ADDED : பிப் 03, 2026 10:44 AM

கடந்த வெள்ளியன்று, வரலாறு காணாத சரிவைக் கண்ட ரூபாயின் மதிப்பு, திங்களன்று சற்று மீண்டும் உயர்வு பாதைக்கு திரும்பி உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 0.50 சதவீதம் உயர்வு கண்டு, 91.49 ஆக இருந்தது.
கடந்த ஒரு மாதத்தில், ஒரு நாளில் கண்ட வலுவான உயர்வு இது. இது ரூபாயின் மீதான அழுத்தம் குறைவதைக் காட்டினாலும், தொடர்ந்து உயர்வு காணும் என கூற முடியாது.
மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் ரூபாயின் மதிப்புக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளன. அரசு பொருளாதாரத்தை முறையாகக் கையாள்கிறது என்ற உறுதி கிடைத்துள்ளது. ஆனால், ரூபாய் சந்தித்து வரும் தற்காலிக வீழ்ச்சியிலிருந்து உடனடி நிவாரணத்தை தரவில்லை. உள்நாட்டு சந்தைகள் சற்று ஆறுதல் அளித்தாலும், சர்வதேச சந்தைகளில் ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் அடுத்த தலைவராக கெவின் வார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வட்டி குறைப்புக்கு ஆதரவாக இருப்பார் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இது, டாலரின் மதிப்பை வலுப்படுத்தி உள்ளது.
கணிப்பு:
தற்போது டாலரின் மதிப்பு 92.00 ரூபாய்க்கு மிக அருகில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இது, ஒரு முக்கியமான திருப்புமுனை போன்றது. ரூபாயின் மதிப்பு 92.00-ஐ தாண்டி நிலைபெற்றால், அது மேலும் சரிந்து 92.20 முதல் 92.50 வரை செல்ல வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பு 92.00க்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க, ரிசர்வ் வங்கி சந்தையில் தலையிடலாம். இதன் காரணமாக, ரூபாய் சற்று மீட்சி கண்டு, வரும் நாட்களில் மீண்டும் 91.00 - 91.20 என்ற வலுவான நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

