/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இணையதளத்தை மேம்படுத்த இ.பி.எப்., சங்கம் கோரிக்கை
/
இணையதளத்தை மேம்படுத்த இ.பி.எப்., சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 01:30 AM

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய தொழிலாளர் அமைச்சகத்துக்கு அச்சங்கம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், அன்றாடம் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக புகாரளிப்பது தொடர்கிறது.
மேலும், தகவல் தொழில்நுட்பக் கருவிகள் அடிக்கடி செயலிழப்பதால், சேவைகளை அளிப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. இ.பி.எப்.ஓ., சேவையளிப்பதில், அதன் இணையதளம் அடிப்படை தளமாக விளங்குகிறது.
இதன் வாயிலாகவே மண்டல அலுவலகங்கள், உறுப்பினர்களின் உரிமைக்கோரல்களை பரிசீலித்து அனுமதி வழங்குகின்றது. ஆனால், சமீபகாலமாக மென்பொருளின் உறுதியற்றத் தன்மையால், இணையதளம் முடங்குவது தொடர்கிறது.
இதனால், அலுவலர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதுடன், இ.பி.எப்.ஓ., சேவைகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. எனவே, வருமான வரித்துறை உள்ளிட்ட பிற அரசின் இணையதளங்களைப் போன்று, இ.பி.எப்.ஓ., இணையதளத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

