/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சேவைகள் துறை வளர்ச்சி ஜூன் மாதத்தில் அதிகரிப்பு
/
சேவைகள் துறை வளர்ச்சி ஜூன் மாதத்தில் அதிகரிப்பு
ADDED : ஜூலை 04, 2024 01:54 AM

புதுடில்லி:புதிய ஆர்டர்கள் மற்றும் ஏற்றுமதியின் வலுவான வளர்ச்சி காரணமாக, கடந்த மாதம் சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
எச்.எஸ்.பி.சி., வங்கி, சேவைகள் துறையைச் சேர்ந்த 400 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா எனும் நிறுவனம் திரட்டுகிறது.
ஜூன் மாதத்துக்கான அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜூன் மாதத்தில், 60.50 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மே மாதத்தில் வளர்ச்சி, 60.20 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரித்ததும், வலுவான தேவையுமே வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின், கடந்த மாதத்தில் தான் பணியமர்த்தல்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூனில் புதிய ஆர்டர்கள் அதிகரித்தன. உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பால், கடந்த மாதம் உற்பத்தி செலவு சற்றே அதிகரித்தது. எனினும், எதிர்கால வணிகச் சூழல் குறித்து, சேவைகள் துறை நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையைச் சேர்த்த கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 60.90 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 60.50 புள்ளிகளாக இருந்தது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.