தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்: பெண்களுக்கான பொருட்கள் விலை அதிகமாக இருப்பது ஏன்?

ஆயிரம் சந்தேகங்கள்: பெண்களுக்கான பொருட்கள் விலை அதிகமாக இருப்பது ஏன்?

ஆயிரம் சந்தேகங்கள்: பெண்களுக்கான பொருட்கள் விலை அதிகமாக இருப்பது ஏன்?


ADDED : ஜூலை 29, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வங்கியில், கல்விக் கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்தவில்லை என்றால், என்ன ஆகும்?


சக்திவேல், திருவண்ணாமலை

ஒன்றும் ஆகாது. மறுபடியும் வேறு எந்த கடனும் வாங்க முடியாது. உங்கள் 'சிபில் ஸ்கோர்' அதலபாதாளத்துக்குப் போகும். வங்கிகள் உங்களைத் தீண்டத்தகாவராக கருதும். கட்டாத ஒவ்வொரு ஆண்டும், உங்களுடைய சிபில் புள்ளிகள் மேலும் குறைந்துகொண்டே போகும்.

நீங்கள் அந்தக் கடனை அடைக்கும்வரை, உங்கள் மீது படிந்த கறை போகவே போகாது. அதன் பிறகு நான் உத்தமன், என் வங்கிக் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன என்று எவ்வளவு சொன்னாலும், உங்கள் மீது விழுந்த கரும்புள்ளி, அழியவே அழியாது.

தெரிந்தவர் ஒருவர், பொதுத் துறை வங்கி ஒன்றில், 'அடல் பென்ஷன்' திட்டத்தில் கணக்கு துவங்கினார். கவனக்குறைவால் அந்த வங்கி கணக்கை மூடி விட்டார். அந்தத் பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வழி உண்டா?


பி.பாலச்சந்தர், சென்னை

இப்படி நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 2017ம் ஆண்டிலேயே, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு வாரியம், அனைத்து வங்கிகளுக்கும் இது விஷயத்தில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், குறிப்பிட்ட வங்கிக் கணக்கு, அடல் பென்ஷன் திட்டத்தோடு இணைக்கப்பட்டதா என்று சரி பார்க்கவேண்டும்.

அப்படி இணைக்கப்பட்டு இருந்தால், அதைத் தொடர வேண்டும் என்பதை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர் அந்த சேமிப்புக் கணக்கை மூடுவதில் உறுதியாக இருந்தால், இன்னொரு சேமிப்புக் கணக்கோடு, அடல் பென்ஷன் திட்ட கணக்கு இணைக்கப்பட்ட பின்னரே, முதலாவதை மூடவேண்டும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு என்று உருவாக்கப்படும் பொருட்களான ஷாம்பூக்கள், முகப்பூச்சுகள் உள்ளிட்ட பல பொருட்கள், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களை விட விலை அதிகமாக இருக்கின்றன?


- எஸ்.சுப்ரியா, தேனி

இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முன்பு, அவை பெண்களுக்கு ஏற்றதுதானா என்பதை கண்டுபிடிக்க, ஆய்வுகளும் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

அதனால் தான், பெண்களுக்கான பொருட்கள் விலை அதிகமாக இருக்கின்றன என்று தயாரிப்பு நிறுவனங்கள் விளக்கம் அளிக்கின்றன. நியாயமற்ற இத்தகைய விலையுயர்வை பெண்கள் மீது சுமத்தப்படும் 'பிங்க் டேக்ஸ்' என்றே வர்ணிக்கின்றனர்.

ஓர் ஆய்வின் படி,பொதுவாக பெண்களுக்கு பிரத்யேகமானது என்று சொல்லப்படும் பொருட்கள் விலை, 7 சதவீதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கான தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பொருட்களின் விலை, 13 சதவீதம் வரை அதிகமாக இருக்கின்றன.

இப்போது தான் இதைப் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் உருவாகி வருகிறது. ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், இதுபோன்ற பாலின ரீதியான பாகுபாடு கொண்ட விலைகளைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில், சொத்துக்கான இண்டெக்சேஷனை விலக்கி விட்டு, வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் இடைப்பட்ட லாபத்தின் மீது, 12.50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதே? இதனால் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாக மாட்டார்களா?


- ஆர்.வெங்கடசுப்பராம், காரைக்குடி

நேரடியாக பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. பில்டர்கள், இந்தப் புதிய நடைமுறையால் வீடு விற்பனை பாதிக்காது என்று கதறுவது காதில் விழுகிறதா? அப்படியானால், பாதிப்பு இருக்கிறது; மக்கள் வீடு வாங்க துணியமாட்டார்கள் என்பதே இதற்கு அர்த்தம்.

வீட்டை லாபம் ஈட்டித் தரும் முதலீடாக பார்க்காதீர்கள்; அது உங்கள் வசதிக்கானது மட்டுமே என்று பலரும் சொல்லி வந்தனர். மத்திய அரசும் அதன் மொழியில் இதே கருத்தை தெரிவித்திருக்கிறது.

அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், ஓராண்டில், குறைந்தபட்ச தொகையை செலுத்தவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் ஒவ்வொரு ஆண்டும் விதிக்கின்றனர். இப்படி அபராதம் விதிக்க விதி இருக்கிறதா?


- குலசை குமார், சென்னை

இருக்கிறதே. இந்தத் திட்டத்தில், ஒவ்வோர் நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால், 50 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் என்று இந்தத் திட்ட ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய பட்ஜெட்டில், 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், வருமானவரி செலுத்த வேண்டாம் என்று சொன்ன நிதி அமைச்சர், இந்த பட்ஜெட்டில் அப்படி சலுகை எதுவும் காட்டவில்லையே? ஏன்?


- என்.கந்தசாமி, மதுரை

அப்படி நேரடியாகச் சொல்லவில்லையே தவிர, புதிய வரி திட்டத்தை ஏற்றால், கிட்டத்தட்ட 17,500 ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்குமாறு செய்திருக்கிறாரே? ஒரு கணக்கின்படி, புதிய வரி திட்டத்தில், 7.75 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டியிராது என்று தெரிகிறது. எல்லா சலுகையும் புதிய வரி திட்டத்துக்கே என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

வரிச் சலுகை கிடைக்கும் என்று நம்பி, வங்கிக் கடனில் வீடோ, இ.எல்.எல்.எஸ். மியூச்சுவல் பண்டு திட்டமோ, காப்பீடு பாலிசிகளோ வாங்கியிருந்தால், அவற்றினால் இனிமேல் பலன் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. பழைய வரி திட்டத்தை முழுமையாக நீக்கிவிடாமல், அதையும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையைத் தான், மக்கள் தொடர்ந்து நிதி அமைச்சரிடம் வைக்கின்றனர்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

ph:98410 53881

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us