UPDATED : பிப் 17, 2026 01:58 AM
ADDED : பிப் 17, 2026 01:03 AM

- நமது சிறப்பு நிருபர் -
உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னேற்ற நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் 'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் மாநாடு 2026' டில்லியில் நேற்று துவங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பது மாநாட்டின் முக்கிய நோக்கம். டில்லி பாரத் மண்டபத்தில் துவங்கியுள்ள இந்த ஐந்து நாள் மாநாடு, இத்துறையில் புதிய வழிகளை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவிந்த வி.ஐ.பி.,க்கள் கிட்டத்தட்ட 45 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரிட்டன் துணை பிரதமர் தலைமையிலான குழுவும் வந்திருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து வலுவான பிரதிநிதிகள் குழு பங்கேற்பதுடன், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., ஜூம், கைன்ட்ரல், அடோப் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
கூகுள் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஓப்பன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாம் ஆல்ட்மன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் 'என்விடா' நிறுவன தலைவர் ஜென்சன் பங்கேற்கவில்லை.
மூன்று கருப்பொருள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட கண்காட்சி மண்டபங்கள் மற்றும் நேரடி விளக்கங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
மக்கள், பூமி, முன்னேற்றம் என்ற மூன்று கருப்பொருள்களில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க நாடுகள், கண்காட்சியில் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் கிருஷ்ணன் கூறுகையில், “இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்தும்; உலகம் முழுதும் இருந்தும் மாநாட்டில் பங் கேற்க 2.50 லட்சத்துக்கு மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளன,” என்றார்.

'

