காசியாபாத் தீ விபத்தில் கால்நடைகள் பாதுகாப்பாக மீட்பு
புதுடில்லி: டில்லி அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் காசியாபாதில், நேற்று முன்தினம் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், 150 குடிசை வீடுகள் சாம்பலாகின. அந்த இடத்திலிருந்து, 40 நாய்கள், இரண்டு பூனைகள், 'பெடா' அமைப்பினரால் மீட்கப்பட்டுள்ளன.
காசியாபாதின் கன்வானி என்ற கிராமம் அருகே உள்ளது, இந்திரபுரம் போலீஸ் ஸ்டேஷன். அந்த போலீஸ் நிலைய எல்லையில், 150 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. அந்த தகவல் கிடைத்ததும், பெடா இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
எரியும் குடிசை வீடுகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட நாய்கள், இரண்டு பூனைகளை பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து, பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டன. அதிக காயம் அடைந்த வீட்டு விலங்குகள், கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
துப்பாக்கியால் சுட்டு
கொள்ளையர்கள் இருவர் கைது
புதுடில்லி: தென்மேற்கு டில்லி மாவட்டத்தின் துவாரகா பகுதியில், பல பகுதிகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும், விக்கி தாக்கர் என்ற தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
ஜதின் சர்மா, 27, மற்றும் பவன் பண்டாரி, 26, ஆகிய இருவரும், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த 8ம் தேதி, மகேந்தர் சிங் என்ற இடத்தில் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவர்கள் இருவரும் தென் மேற்கு டில்லியின் துவாரகா பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, லேசான துப்பாக்கிச்சூடு நடத்தி, இருவரையும் கைது செய்தனர்.
இருவரிடம் இருந்து நாட்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், இரு சக்கர வாகனங்களை பறி முதல் செய்துள்ள போலீசார், விசாரிக்கின்றனர்.
உ.பி.,யிலிருந்து துப்பாக்கி
வாங்கிய வாலிபர் கைது
புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தின் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில், இளநிலை பட்டப்படிப்பு படித்து வரும் ஆபு தாலிப், 27, என்பவரை கைது செய்த போலீசார், உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட ஆயுத விற்பனையை கண்டறிந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில், சட்ட விரோதமாக, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து, கைத்துப்பாக்கி வாங்கி வந்த, கல்லுாரி மாணவர் அபு தாலிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக எழுந்த தகராறை அடுத்து, மீரட் நகரிலிருந்து கைத்துப்பாக்கியை வாங்கி வந்ததாக அவர் கூறினார்.
அதையடுத்து, டில்லி போலீசார், உத்தர பிரதேசத்திற்கு சென்று, அந்த மாணவர் ஆயுதம் வாங்கிய இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
கைதான அபு தாலிப் மீது, பார்ஸ் பஜார் பகுதியில் ஏற்கனவே மோதலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போதை பொருள் சப்ளை போலீசில் இருவர் சிக்கினர்
புதுடில்லி: தெற்கு டில்லி மாவட்டத்தில், எம்.எம்.டி.ஏ., என்ற அதிபயங்கர போதைப் பொருளை சப்ளை செய்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலிடம் இருந்து, 29 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தீபக் குமார், 37, மற்றும் பர்கான், 30, என்ற இருவரும் தான், போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள், போதைப்பொருட்களை நீண்ட காலமாக விற்று வந்தவர்கள் என்பது தெரிந்து, போலீசார் அவர்களிடம் விசாரிக்கின்றனர்.
கைதான இருவரிடம் இருந்து, 29 போதை மாத்திரைகள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.

