ADDED : ஏப் 23, 2026 04:27 AM
புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை தாண்டி வர்த்தகமானது. ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே, இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணமாகும்.
இதன் காரணமாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.60 சதவீதம் அதிகரித்து, பேரலுக்கு 100.07 டாலராகவும், டபிள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை 1.7 சதவீதம் உயர்ந்து, 91.18 டாலராகவும் வர்த்தகமானது.
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை தொடர ஏதுவாக ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இதற்கு ஈரானும், இஸ்ரேலும் ஒப்புக்கொள்ளுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு கடந்த வாரத்தில் 45 லட்சம் பேரல்கள் அளவுக்கு குறைந்துள்ளதாக வெளியான தகவல்களும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளன.
நேற்று இரவு நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு, 100 டாலரை ஒட்டி வர்த்தகமானது.
