ADDED : ஜூன் 09, 2026 07:21 AM

மும்பை: கடந்த 2025 - 26 நிதியாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய 2024 - 25 நிதியாண்டில் கிட்டத்தட்ட 2.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில் செலவை விட வரவு அதிகமாக இருந்தால் அது நடப்பு கணக்கு உபரி; அதுவே, வரவை விட செலவு அதிகமாக இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை.
இதனிடையே, ஜனவரி - மார்ச் காலாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு உபரி 67,450 கோடி ரூபாயாக இருந்தது என ஆர்.பி.ஐ., அறிக்கை தெரிவிக்கிறது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் கிட்டத்தட்ட 1.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் சரக்கு வர்த்தக பற்றாக்குறை 5.63 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 7.92 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
எனினும், சேவைகள் துறையின் வலுவான ஏற்றுமதி மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவது அதிகரிப்பு ஆகியவற்றால் உபரி நிலை தொடர்ந்தது.
