சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை எதிர்ப்பால் திரும்ப பெற்றது அரசு
சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை எதிர்ப்பால் திரும்ப பெற்றது அரசு
ADDED : ஜூன் 01, 2026 06:08 AM
புதுடில்லி: உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை 2026 வரைவை, மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1966ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணையை, புதிய டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில், சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை 2026 வரைவை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் யூனிட்களில் ஒரு நாளைக்கு 500 டன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், 10 பேர் வேலையாட்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்த வரைவு வலியுறுத்துகிறது.
ஏற்கனவே இருக்கும் சட்டத்தில், ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யலாம் என்று இருக்கிறது. அதேபோல், 20 அல்லது அதற்கும் மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரியலாம் என்றும் விதிமுறை உள்ளது.
அதனால், புதிய வரைவு நடைமுறைக்கு வந்தால், நாட்டு சர்க்கரை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
